அமித்ஷாவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும்- மத சுதந்திரத்திற்கான அமெரிக்க கமிஷன் அறிவுறுத்தல்


அமித்ஷாவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும்- மத சுதந்திரத்திற்கான அமெரிக்க  கமிஷன் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 10 Dec 2019 7:09 AM GMT (Updated: 10 Dec 2019 7:09 AM GMT)

அமித்ஷாவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று மத சுதந்திரத்திற்கான அமெரிக்க கமிஷன் அறிவுறுத்தியுள்ளது.

வாஷிங்டன்,

இந்தியாவில் முன்மொழியப்பட்டுள்ள குடியுரிமை திருத்த மசோதா, தவறான திசைக்கு செல்லும் ஆபத்தான திருப்பம்” என்று விமர்சித்துள்ள மதசுதந்திரத்திற்கான அமெரிக்க மத்திய ஆணையம்,  பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது  பற்றி அமெரிக்கா தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என்று கோரியுள்ளது.  

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். 9 மணி நேர நீண்ட விவாதத்திற்கு பிறகு, இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. 

2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதிக்கு முன்பு, பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என்று மசோதாவில் கூறப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. 

இந்த நிலையில்,  சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம், மேற்கூறிய மசோதா  இந்தியா பாராளுமன்ற மக்களவையில் நிறைவேறியதற்கு வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ குடியுரிமை சட்ட திருத்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டால், இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பிற முதன்மை தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது  பற்றி அமெரிக்க அரசு பரிசீலிக்க வேண்டும். குடியுரிமை சட்ட திருத்த மசோதா, தவறான பாதையில் எடுக்கப்பட்ட ஆபத்தான திருப்பம்.   இந்த மசோதா, இந்தியாவின் பெருமைமிக்க வரலாறான  மதச்சார்பற்ற பன்முகத்தன்மை மற்றும் அரசியலமைப்புக்கு எதிராக உள்ளது. இந்திய அரசு, குடியுரிமை வழங்க மதத்தைக் கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது. இது பல லட்ச முஸ்லிம்களின் குடியுரிமை பறிபோக வழிவகுக்கும்” என்று ஆணையம் தெரிவித்துள்ளது. 

சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஆணையத்தின் பரிந்துரைகள்  எந்த வகையிலும் செயல்படுத்தப்படாது. எனினும், இந்த அமைப்பின் பரிந்துரைகளை அமெரிக்க அரசு கவனத்தில் கொள்ளும். குறிப்பாக, வெளிநாட்டு நிறுவனங்கள், தனிநபர்கள் மீது தடை விதிக்கும் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை இந்த பரிந்துரைகளை கவனத்தில் எடுத்துக்கொள்ளும் என்று கூறப்படுகிறது. 

Next Story