பிரிட்டனில் மீண்டும் போரிஸ் ஜான்சன் ஆட்சி அமைக்க வாய்ப்பு, அதிக இடங்களில் முன்னிலை


பிரிட்டனில் மீண்டும் போரிஸ் ஜான்சன் ஆட்சி அமைக்க  வாய்ப்பு, அதிக இடங்களில் முன்னிலை
x
தினத்தந்தி 13 Dec 2019 3:42 AM GMT (Updated: 13 Dec 2019 3:42 AM GMT)

இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.

லண்டன்,

650 இடங்களை கொண்ட இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடந்தது. இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து முழுவதும் உள்ள 650 தொகுதிகளில் உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இங்கிலாந்தை பொறுத்தவரையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். அந்த வகையில் தற்போது 4 கோடியே 60 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.  

வாக்குப்பதிவு முடிந்ததும் உடனடியாக வாக்குள் எண்ணும் பணி துவங்கியது.  இதில் துவக்க நிலையில்,  கருத்து கணிப்புகளுக்கு மாறாக தொழிலாளர் கட்சி சில இடங்களில் முன்னிலை பெற்றது. ஆனால், சிறிது நேரத்திலேயே நிலமை மாறி, கன்சர்வேட்டிவ் கட்சி முன்னிலை பெறத்தொடங்கியது.  

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைக்கு 326 இடங்களில் வெற்றி பெற வேண்டியது கட்டாயம் ஆகும். இந்த செய்தி பதிப்பிடும் சமயத்தில்,  338 தொகுதிகளில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், கன்சர்வேட்டிவ் கட்சி 172 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.  லேபர் கட்சி 120 இடங்களில் வென்றுள்ளது. 

தொழிலாளர் கட்சியின் கோட்டையாகக் கருதப்படும் பல்வேறு தொகுதிகளிலும் கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். குறிப்பாக வடக்கு இங்கிலாந்து, வேல்ஸ் பகுதிகளில் முக்கிய தொகுதிகளை தொழிலாளர் கட்சி இழந்தது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் போரிஸ் ஜான்சனின் பழமைவாத கட்சி 368 இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டது. கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெற்றால் அதன் மூலம் போரீஸ் ஜான்சன் மீண்டும் பிரதமராவார். 

"போரீஸ் ஜான்சன் மீண்டும் பிரதமராகும் பட்சத்தில், நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றி கிறிஸ்துமஸ் தினத்திற்குள் பிரெக்ஸிட்டை நிகழ்த்த முனைவார்," என உள்துறைச் செயலர் பிரிதி பட்டேல் தெரிவித்துள்ளார். 

Next Story