புதிய கொரோனா வைரஸை மீண்டும் உருவாக்கிய விஞ்ஞானிகள்! விரைவில் மருந்து !!
புதிய கொரோனா வைரஸை மீண்டும் விஞ்ஞானிகள் உருவாக்கினார்கள். இது வைரஸைக் கண்டறிந்து சிகிச்சையளிப்பதற்கான முயற்சிகளுக்கு உதவக்கூடும்.
சிட்னி
சீனாவின் ஹுபே மாகாணம் யுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் சீனா முழுவதும் வேகமாக பரவி வருகிறது. திபெத் தவிர மற்ற அனைத்து மாகாணங்களுக்கும் இந்த வைரஸ் தாக்குதல் பரவியுள்ளது.
சீனாவில் இந்த வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்து உள்ளது. இதுவரை வைரஸ் தாக்குதல் உறுதியாகி உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 5,974 ஆக உயர்ந்துள்ளது.
தாய்லாந்து, பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட 17 நாடுகளில் குறைந்தது 47 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன. சீனாவுக்கு வெளியே எந்த இறப்பும் இதுவரை பதிவாகவில்லை.
இந்த வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் முயற்சியில் உலக விஞ்ஞானிகள் ஈடுபட்டு உள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் உள்ள விஞ்ஞானிகள், சீனாவுக்கு அடுத்தபடியாக புதிய கொரோனா வைரஸை மீண்டும் உருவாக்கியுள்ளனர். வைரஸைக் கண்டறிந்து சிகிச்சையளிப்பதற்கான முயற்சிகளுக்கு உதவக்கூடும் என்ற நம்பிக்கையில் இந்த கண்டுபிடிப்பு உலக சுகாதார அமைப்புடன் பகிரப்படும் என தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட நோயாளியிடமிருந்து பெறப்பட்ட வைரஸ் மாதிரி கடந்த வெள்ளிக்கிழமை அவர்களுக்கு அனுப்பப்பட்டதாகவும், அதன் மூலம் வைரஸின் நகலை வளர்க்க முடிந்தது என ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள ஒரு சிறப்பு ஆய்வகத்தின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது போன்ற ஒரு சம்பவத்திற்கு நாங்கள் பல ஆண்டுகளாக திட்டமிட்டுள்ளோம், அதனால்தான் எங்களால் இவ்வளவு விரைவாக உருவாக்க முடிந்தது என்று தொற்று மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கான பீட்டர் டோஹெர்டி நிறுவனத்தின் டாக்டர் மைக் காட்டன் கூறினார்.
டாக்டர்கள் இந்த நகலை சோதனை கட்டுப்பாட்டுப் பொருளாக பயன்படுத்தலாம் என்றும், நோயறிதலுக்கான மாற்றாக இருக்கும் என்றும் கூறினார்.
நோய் அறிகுறிகளைக் காட்டாத நபர்களிடம் வைரஸைக் கண்டறியக்கூடிய ஆரம்ப-நோயறிதல் பரிசோதனையை இது உள்ளடக்கியிருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
ஆன்டிபயாடிக் சோதனை சந்தேகத்திற்குரிய நோயாளிகளை மறுபரிசீலனை செய்ய உதவும். வைரஸ் எவ்வளவு பரவலாக உள்ளது, அதன் விளைவு, உண்மையான இறப்பு விகிதம் ஆகியவற்றை நாம் இன்னும் துல்லியமாக சேகரிக்க முடியும் என டாக்டர் காட்டன் கூறினார்.
மேலும், இந்த கொரோனா வைரஸ் நகலின் மூலம் சோதனை தடுப்பூசிகளின் செயல்திறனை மதிப்பிடுவதற்கும் உதவும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவில் உள்ள விஞ்ஞானிகளும் இந்த வைரஸை மீண்டும் உருவாக்கி அதன் மரபணுவை பகிர்ந்துள்ளனர்.
Related Tags :
Next Story