சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு; ஒரே நாளில் 242 பேர் பலி


சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு; ஒரே நாளில் 242 பேர் பலி
x
தினத்தந்தி 13 Feb 2020 1:28 AM GMT (Updated: 13 Feb 2020 1:28 AM GMT)

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 1,350ஐ கடந்துள்ளது.

பெய்ஜிங்,

சீனாவில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஹுபெய் மாகாண தலைநகர் உகானில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது.  இதன்பின்னர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் என நாடு முழுவதும் பரவியது.  எனினும், உகானில் இந்த வைரஸ் அதிக பாதிப்பு ஏற்படுத்தியது.  இதனால் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.

கொரோனா வைரஸ் பாதிப்பினால் இதுவரை உகானில் அமெரிக்க பெண் மற்றும் ஜப்பானிய ஆண் என வெளிநாடுகளை சேர்ந்த 2 பேர் பலியாகி உள்ளனர்.  இதேபோன்று, பிலிப்பைன்ஸ் தீவில் சீனர் ஒருவர் மற்றும் ஹாங்காங் நாட்டில் ஒருவர் என சீனாவை தவிர்த்து வெளிநாடுகளில் இருவர் பலியாகினர்.

இந்நிலையில், சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு கடந்த 9ந்தேதி 81 பேர் உயிரிழந்தனர்.  பலி எண்ணிக்கை 803 ஆக உயர்ந்தது.  இதேபோன்று 2,147 பேர் கூடுதலாக வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகினர்.  இதனால் சீனா முழுவதும் 36,690 பேருக்கும் கூடுதலாக நோய் பாதிப்பிற்கு ஆளாகி இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இது, கடந்த 2002 மற்றும் 2003ம் ஆண்டுகளில் ஏற்பட்ட சார்ஸ் வைரஸ் தாக்குதலுக்கு 774 பேர் பலியான  எண்ணிக்கையை விட அதிகம்.

தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் இந்த எண்ணிக்கை உயர்ந்து 908 ஆகவும், 1,011 ஆகவும் உயர்வடைந்தது.

இந்நிலையில், நேற்று 94 பேர் உயிரிழந்து உள்ளனர்.  இதனால் பலி எண்ணிக்கை 1,110 ஆக அதிகரித்து உள்ளது.  இதேபோன்று 1,638 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.  இதனால் 44,200க்கும் கூடுதலான பேருக்கு சீனா முழுவதும் வைரஸ் பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டது.

ஒரே நாளில் 242 பேர் பலியான நிலையில், வைரஸ் பாதிப்பிற்கு பலியானோர் எண்ணிக்கை இன்று 1,350ஐ கடந்துள்ளது.  இதேபோன்று 14,840 பேருக்கு கூடுதலாக வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது.  இதனால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க கூடும் என கூறப்படுகிறது.

Next Story