அமெரிக்காவில் நியூயார்க் கோர்ட்டு நீதிபதியாக இந்திய பெண் நியமனம்


அமெரிக்காவில் நியூயார்க் கோர்ட்டு நீதிபதியாக இந்திய பெண் நியமனம்
x
தினத்தந்தி 6 May 2020 12:33 AM GMT (Updated: 6 May 2020 12:33 AM GMT)

அமெரிக்காவில் நியூயார்க் கோர்ட்டு நீதிபதியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் நியமனமிக்கப்பட்டுள்ளார்.

வாஷிங்டன், 

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான நிர்வாகத்தில் பெருமளவு இந்தியர்கள் உயர் பொறுப்பில் பதவி வகித்து வருகின்றனர். அந்த வகையில் நியூயார்க்கில் உள்ள கிழக்கு மாவட்ட கோர்ட்டு நீதிபதியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் வக்கீல் சரிதா கோமதிரெட்டி என்பவரை டிரம்ப் நியமித்துள்ளார்.

இதற்கான நியமனத்தை செனட் சபை ஒப்புதலுக்காக அவர் அனுப்பி வைத்துள்ளார். புகழ்பெற்ற ஹார்வர்டு சட்ட கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற கோமதி ரெட்டி, கொலம்பியாவில் உள்ள அமெரிக்காவின் மேல்முறையீட்டு கோர்ட்டில் சட்ட எழுத்தராக பணியாற்றினார். மேலும் அமெரிக்க சட்டத்துறையில் பல்வேறு உயர் பதவிகளை இவர் வகித்துள்ளார்.

இதே போல் இந்திய வம்சாவளியை சேர்ந்த வக்கீல் அசோக் மைக்கேல் பிண்டோவை உலக வங்கியின் குழுமத்தில் உள்ள பன்னாட்டு புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கியின் (ஐ.பி.ஆர்.டி) அமெரிக்க பிரதிநிதியாக டிரம்ப் நியமித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷின் சிறப்பு உதவியாளராகவும், இணை ஆலோசகராகவும் பணியாற்றிய பிண்டோ ஐ.பி.ஆர்.டி.யின் அமெரிக்க மாற்று நிர்வாக இயக்குனராக 2 ஆண்டுகள் பதவிவகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபையில் வர்த்தகம், அறிவியல் மற்றும் போக்குவரத்து தொடர்பான குழுவின் தலைமை ஆலோசகர் மற்றும் கொள்கை இயக்குனர், பிரதிநிதிகள் சபையில் மேற்பார்வை மற்றும் அரசாங்க சீர்திருத்த குழுவிற்கான தலைமை ஆலோசகர் உள்ளிட்ட உயர் பதவிகளை இவர் வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story