எல்லைப் பகுதியில் அமைதியை பேணுவதற்கு சீனா உறுதிபூண்டுள்ளது - சீன பாதுகாப்பு அமைச்சகம்


எல்லைப் பகுதியில் அமைதியை பேணுவதற்கு சீனா உறுதிபூண்டுள்ளது - சீன பாதுகாப்பு அமைச்சகம்
x
தினத்தந்தி 29 May 2020 7:10 AM GMT (Updated: 29 May 2020 8:56 AM GMT)

எல்லைப் பகுதியில் அமைதியை பேணுவதற்கு சீனா எல்லைப் படைகள் உறுதிபூண்டுள்ளது என சீன பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

பெய்ஜிங்

2009-ம் ஆண்டு, அருணாச்சல பிரதேசத்தின் தவாங் பகுதிக்கு புத்தமத தலைவர் தலாய்லாமா வந்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஜம்மு காஷ்மீர் மற்றும் அருணாச்சல பிரதேசத்திலிருந்து சீனாவுக்கு செல்பவர்களுக்கு, சீன அரசு தனி விசா வழங்கத் தொடங்கியது.

டெல்லியில் உள்ள சீன தூதரும், தூதரக அதிகாரிகளும் ஜம்மு காஷ்மீருக்கு பயணம் மேற்கொள்வதை நிறுத்திக்கொண்டனர். அதேபோல், இருநாட்டு ராணுவ ஒத்துழைப்பு நிகழ்வுகள் ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் பட்சத்தில், அதில் கலந்துகொள்வதை சீன ராணுவ அதிகாரிகள் தவிர்த்தனர்.

2010-ம் ஆண்டில் அப்போதைய சீன அதிபர் வென் ஜியாபோ இந்தியா வந்திருந்த போது, சீன அரசின் அதிகாரப்பூர்வமான தொலைக்காட்சி, இந்திய நில பரப்பில் ஆயிரத்து 600 கிலோ மீட்டர் நீளத்தை வேண்டுமென்றே குறைத்து அறிவித்தது.

2015-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி சீனா சென்றிருந்த சமயம், சீன அரசு தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட இந்திய வரைபடத்தில், காஷ்மீர் மற்றும் அருணாச்சல பிரதேசம் இடம்பெறவில்லை.

2017-ம் ஆண்டு, தலாய்லாமா மீண்டும் தவாங் சென்றபோது, அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அருணாச்சல பிரதேசத்தின் 6 முக்கிய இடங்களின் பெயர்களை மாற்றி சீன அரசு அறிவிப்பு வெளியிட்டது. 2019-ம் ஆண்டு, அருணாச்சல பிரதேசமும், தைவானும் இடம்பெறாமல் அச்சிடப்பட்ட 30,000 சீன வரைபடங்களை அந்நாட்டு அரசு ஒட்டுமொத்தமாக அழித்தது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், சீன அரசின் புவியியல் துறையால் வெளியிடப்பட்ட டிஜிட்டல் வரைபடத்தில், அருணாச்சல பிரதேசம் சீனாவின் ஒருங்கிணைந்து பகுதியாக காட்டப்பட்டது.

தற்போது லடாக் பகுதியில் சீன ராணுவம் மேற்கொண்டுள்ள அத்துமீறல் ஜம்மு காஷ்மீருக்கு உட்பட்ட அக்சாய்சின் பீடபூமி முழுவதும் சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று அறிவிக்கவே மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையே இந்த மாத துவக்கத்தில் இருந்து பிரச்சினை நிலவி வருகிறது. கடந்த மே 5-ஆம் தேதி லடாக் எல்லையில் சீனாவின் போர் படைகள் அத்துமீறி உள்ளே நுழைந்தது. அதன் பின் சிக்கிம் எல்லையில் சீனாவின் படைகள் அத்து மீறியது.

இதனால் இரண்டு எல்லையிலும் சீனா மற்றும் இந்திய படைகள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் காரணமாக தற்போது இரண்டு நாடுகளும் தங்கள் எல்லையில்  படைகளை குவித்து வருகின்றன.

அதுமட்டுமின்றி, போருக்கு தயாராக இருக்கும் படி தன் நாட்டு இராணுவத்திற்கு சீனா அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்ததால் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே சமரசம் செய்து வைக்க தயார் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் புதன்கிழமை டுவிட்டர் மூலம் தெரிவித்தார்.

இந்த நிலையில் எல்லை விவகாரம் தொடர்பாக முதல் முறையாக சீனா வாய் திறந்து உள்ளது.

இந்தியா-சீனா எல்லையில் நிலைமை "நிலையானது மற்றும் கட்டுப்படுத்தக்கூடியது" என்று சீன பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

எல்லைப் பிரச்சினை தொடர்பாக சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் சமரசம் செய்ய தயார் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறியதற்கு நேரடியாகக் கருத்துத் தெரிவிக்காமல், நிறுவப்பட்ட தகவல் தொடர்பு வழிமுறைகள் மூலம் நிலைமையைத் தீர்ப்பதற்கு இரு நாடுகளும் தயாராக உள்ளன என்று சீனா அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மூத்த கேணல் ரென் குய்கியாங் கூறும் போது

சீனா-இந்தியா எல்லையில் சீனாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. எல்லைப் பகுதிகளில் அமைதியை பேணுவதற்கு சீனா எல்லைப் படைகள் உறுதிபூண்டுள்ளன.

தற்போது, சீனா-இந்தியா எல்லைப் பகுதிகளின் நிலைமை நிலையானது மற்றும் ஒட்டுமொத்தமாக கட்டுப்படுத்தக்கூடியது.

இரு தரப்பினரும் நிறுவப்பட்ட எல்லை தொடர்பான வழிமுறைகள் மற்றும் தூதரக தொடர்புகள் மூலம்  பிரச்சினைகளைத் தொடர்புகொண்டு தீர்க்கும் திறனைக் கொண்டுள்ளனர் என கூறினார்.

Next Story