ஈராக்கில் அமெரிக்க வீரர்கள் தங்கியுள்ள ராணுவத் தளத்தில் ராக்கெட் வீச்சு


ஈராக்கில் அமெரிக்க வீரர்கள் தங்கியுள்ள ராணுவத் தளத்தில் ராக்கெட் வீச்சு
x
தினத்தந்தி 28 July 2020 11:24 PM GMT (Updated: 28 July 2020 11:24 PM GMT)

ஈராக்கில் அமெரிக்க வீரர்கள் தங்கியுள்ள ராணுவத் தளத்தில் ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

பாக்தாத், 

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க ராணுவம் நடத்திய வான்தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இதனால் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே மோதல் வெடித்தது. இதன் காரணமாக ஈராக்கில் இருக்கும் ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் அங்குள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் அந்த நாட்டின் படை வீரர்களை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தலைநகர் பாக்தாத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அல் தாஜி ராணுவ தளத்தில் நேற்று முன்தினம் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த ராணுவ தளத்தில் அமெரிக்க வீரர்கள் ஏராளமானோர் முகாமிட்டுள்ளனர். நேற்று முன்தினம் மாலை ராணுவத் தளத்துக்குள் அடுத்தடுத்து 3 ராக்கெட்டுகள் விழுந்து வெடித்துச் சிதறின. இந்த தாக்குதலில் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.

அமெரிக்க வீரர்களை குறிவைத்து இந்த ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிகிறது. எனினும் எந்த ஒரு பயங்கரவாத அமைப்பு உடனடியாக இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை.

Next Story