இந்தியாவின் மற்றொரு பகுதியையும் சொந்தம் கொண்டாடும் நேபாளம் -மேயரின் பேச்சால் சர்ச்சை


இந்தியாவின் மற்றொரு பகுதியையும் சொந்தம் கொண்டாடும் நேபாளம் -மேயரின் பேச்சால் சர்ச்சை
x
தினத்தந்தி 3 Aug 2020 6:50 AM GMT (Updated: 3 Aug 2020 6:50 AM GMT)

இந்தியாவின் மற்றொரு பகுதியையும் சொந்தம் கொண்டாடும் நேபாளம் மேயரின் பேச்சால் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.


காட்மாண்டு

இந்தியாவுக்குச் சொந்தமான லிபுலேக், கல்பானி மற்றும் லிம்பியாதுரா ஆகிய பகுதிகளுக்கு சமீபத்தில் நேபாளம் உரிமை கொண்டாடியது. அதோடு, இந்தப் பகுதிகளை இணைத்து புதிய வரைபடத்தையும் கடந்த மே மாதம்  வெளியிட்டது. நேபாளத்தின் இந்த நடவடிக்கைக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஒரு தலைபட்சமான நடவடிக்கை எனவும் வரலாற்று பூர்வமாக எந்த ஆதாரங்களும் இன்றி நேபாளம் தன்னிச்சையாக செயல்படுவதாக இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.

தொடர்ந்து நேபாள பிரதமர் கே.பி. ஒலியும்  இந்தியாவுக்கு எதிராக  பேசி வருகிறார். இதனால் இருநாட்டு உறவில் பிளவுகள் மேலும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் நேபாள நாட்டின் பிம்துத் நகர் பலித்ராகாவின் மேயர் சுரேந்திர பிஷ்த் புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதாவது, இந்திய - நேபாள எல்லையில் இருக்கும் சம்பாவத் மாவட்டத்தின் குமாவன் பகுதி நேபாளத்திற்கு சொந்தமானது.

இந்தப் பகுதி பல ஆண்டுகளாக நகர் பலிகாவின் வனச் சமூகக் குழுவால்(வன் சமிதி) நிர்வகிக்கப்பட்டு வந்தது. இங்கு மர வேலைப்பாடுகள் நிறைந்த கட்டுமானங்கள் நீண்ட காலமாக இருந்துள்ளன. ஏராளமான மரக் கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்துள்ளது. இருநாட்டு அதிகாரிகளும் கூட்டாக நில அளவை பணிகளில் ஈடுபட்டு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

எல்லைப் பிரச்சினை இருநாட்டிற்கு நல்லதல்ல. விரைவில் இது முடிவுக்கு வர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சம்பாவத் மாவட்டம் தனக்பூர் எல்லைப் பகுதியில் நேபாள நாட்டினர் அத்துமீறி உள்ளே நுழைந்துள்ளனர். இது பில்லர் நம்பர் 811 என்ற கூறப்படும் கைவிடப்பட்ட பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இதற்கு இந்திய பாதுகாப்பு அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. இதுபற்றி நேபாள நாட்டு உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. உடனே சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்த அதிகாரிகள் விசாரணை நடத்தினர். வரும் வாரங்களில் இருநாட்டு அதிகாரிகளும் சந்தித்து இந்தப் பிரச்சினை குறித்து ஆலோசனை நடத்துவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story