செப்.15-க்குள் விற்பனை செய்யவில்லை என்றால் டிக் டாக் செயலிக்கு தடை நிச்சயம்: டிரம்ப்


செப்.15-க்குள் விற்பனை செய்யவில்லை என்றால் டிக் டாக் செயலிக்கு தடை நிச்சயம்: டிரம்ப்
x
தினத்தந்தி 4 Aug 2020 2:17 AM GMT (Updated: 4 Aug 2020 2:17 AM GMT)

டிக்டாக் செயலி தங்கள் நாட்டு நிறுவனத்திற்கு விற்கப்படவில்லை என்றால் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் அந்த செயலி அமெரிக்காவில் செயல்பட தடை விதிக்கப்படும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

சீனாவை சேர்ந்த பைட்டான்ஸ் என்ற நிறுவனத்துக்குச் சொந்தமான டிக்-டாக் உள்பட சீனாவின் 59 செயலிகளுக்கு இந்தியா கடந்த மாதம் தடை விதித்தது. அதனை தொடர்ந்து அமெரிக்காவிலும் டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்க கோரிக்கைகள் வலுத்தன. இது தொடர்பாக அண்மையில் பேசிய அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் அமெரிக்காவில் டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்க முடிவு செய்திருப்பதாக கூறினார்.

அதனைத் தொடர்ந்து பைட்டான்ஸ் நிறுவனத்திடம் இருந்து டிக்-டாக் செயலியை விலைக்கு வாங்க அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகின. எனினும் மைக்ரோசாப்ட் நிறுவனம் இது குறித்து எந்தவிதமான உறுதியான தகவலும் தெரிவிக்காமல் இருந்து வந்தது.

இந்நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான சத்ய நாதெல்லா நேற்று முன்தினம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை நேரில் சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “டிக்-டாக் செயலியை விலைக்கு வாங்குவது தொடர்பாக ஆய்வுசெய்து வருகிறோம். இதுதொடர்பாக மைக்ரோசாப்ட் பேச்சுவார்த்தைக்கு தயாராகி வருகிறது” என தெரிவித்துள்ளது.

இந்நிலையில், டிக்டாக்கின் உரிமத்தை அமெரிக்க நிறுவனம் வாங்கினால் எந்த பிரச்சனையும் இல்லை எனவும் ஒருவேளை டிக்டாக் செயலி தங்கள் நாட்டு நிறுவனத்திற்கு விற்கப்படவில்லை என்றால் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் அந்த செயலி அமெரிக்காவில் செயல்பட தடை விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.


Next Story