ஆப்கானிஸ்தானில் அமெரிக்க வீரர்கள் எண்ணிக்கையை 4 ஆயிரமாக குறைக்க முடிவு


ஆப்கானிஸ்தானில் அமெரிக்க வீரர்கள் எண்ணிக்கையை 4 ஆயிரமாக குறைக்க முடிவு
x
தினத்தந்தி 4 Aug 2020 11:03 PM GMT (Updated: 4 Aug 2020 11:03 PM GMT)

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க வீரர்கள் எண்ணிக்கையை 4 ஆயிரமாக குறைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

நியூயார்க்,

ஆப்கானிஸ்தானில் 19 ஆண்டுகளாக நீடிக்கும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் விதமாக தலீபான் பயங்கரவாதிகளுடன் அமெரிக்க அரசு கடந்த பிப்ரவரி மாத இறுதியில் வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தியது. அந்த ஒப்பந்தத்தின் படி அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகள் மீது தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தாமல் இருப்பதற்கு பிரதிபலனாக ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க வீரர்களை முழுமையாக திரும்ப பெறுவதாக அமெரிக்கா உத்தரவாதம் அளித்தது.

அதன் அடிப்படையில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்கும் நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் நவம்பர் மாதத்துக்குள் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கையை 4 ஆயிரமாக குறைக்க முடிவு செய்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியின் போது இதுகுறித்து அவர் கூறுகையில் “மிகக் குறுகிய காலத்தில் ஆப்கானிஸ்தானில் நமது வீரர்களின் எண்ணிக்கையை 8 ஆயிரமாக குறைத்தோம். தற்போது அதை 4 ஆயிரமாக குறைக்க போகிறோம். இது குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறோம். அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடக்க இருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு இது சாத்தியமாகும்” எனக் கூறினார்.

Next Story