லிபியாவில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து 24 பேர் பலி


லிபியாவில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து 24 பேர் பலி
x
தினத்தந்தி 15 Sep 2020 10:27 PM GMT (Updated: 15 Sep 2020 10:27 PM GMT)

லிபியாவில் அகதிகள் படகு கவிழ்ந்ததில் 24 பேர் பலியாகினர்.

திரிபோலி, 

உள்நாட்டு போரால் நிலைகுலைந்துள்ள ஈராக், சிரியா, லிபியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்தும், வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர்.

இவர்கள் மத்திய தரைக்கடல் வழியாக சட்டவிரோதமாக படகுகளில் பயணம் செய்து ஐரோப்பிய நாடுகளை அடைகின்றனர்.

இப்படி மிகச் சிறிய படகில் அளவுக்கு அதிகமான மக்களுடன் ரகசியமாக மேற்கொள்ளப்படும் நீண்ட கடல் பயணங்கள் பல நேரங்களில் துயரத்தில் முடிந்துவிடுகின்றன. எனவே இதுதொடர்பாக சர்வதேச இடம்பெயர் அகதிகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து மக்களை எச்சரித்துவருகின்றன.

இந்த நிலையில் லிபியாவின் ஜ்வாரா கடல்பகுதியில் அகதிகளை ஏற்றிக்கொண்டு 3 சிறிய படகுகள் சென்று கொண்டிருந்தன. அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் படகு ஒன்று திடீரென கடலில் கவிழ்ந்தது. இதில் கப்பலில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கினர்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் லிபிய கடலோர காவல் படையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். எனினும் 24 பேரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது. இந்த விபத்தில் மேலும் பலர் மாயமாகி இருக்கலாம் என்று தெரிகிறது. எனவே அவர்களை தேடும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.

Next Story