மருத்துவ துறைக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு; ‘ஹெபாடைடிஸ் சி’ வைரசை கண்டுபிடித்தவர்கள்


மருத்துவ துறைக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு; ‘ஹெபாடைடிஸ் சி’ வைரசை கண்டுபிடித்தவர்கள்
x
தினத்தந்தி 6 Oct 2020 12:14 AM GMT (Updated: 6 Oct 2020 12:14 AM GMT)

மருத்துவ துறைக்கான நோபல் பரிசு, 3 விஞ்ஞானிகளுக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஹெபாடைடிஸ் சி வைரசை கண்டுபிடித்தவர்கள் ஆவர்.

ஸ்டாக்ஹோம்,

மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம், அமைதி ஆகிய துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு உலகின் உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகளை அறிவிக்கும் பணி நேற்று தொடங்கியது. முதல் நாளில், மருத்துவ துறைக்கான நோபல் பரிசை சுவீடன் நாட்டின் ஸ்டோக்ஹோம் நகரில் நோபல் பரிசு கமிட்டி அறிவித்தது.

அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகள் ஹார்வே ஜே.ஆல்டர், சார்லஸ் எம்.ரைஸ், இங்கிலாந்துவிஞ்ஞானி மைக்கேல் ஹாக்டன் ஆகியோருக்கு மருத்துவ துறைக்கான நோபல் பரிசு கூட்டாக அறிவிக்கப்பட்டது. ஹெபாடைடிஸ் சி வைரஸ் கண்டுபிடிப்புக்காக இவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக பரிசு கமிட்டி தெரிவித்தது.

உலகம் முழுவதும் 7 கோடி ஹெபாடைடிஸ் நோயாளிகள் இருப்பதாகவும், ஆண்டுதோறும் 4 லட்சம் பேர் இந்நோய்க்கு பலியாவதாகவும் உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. கல்லீரல் அழற்சி, புற்றுநோய் ஆகியவற்றுக்கு இது முக்கிய காரணமாக அமைகிறது.

இந்த 3 விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புக்கு முன்பு, ஹெபாடைடிஸ் ஏ, ஹெபாடைடிஸ் பி என்ற 2 வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருந்தன. ஆனால், ரத்தம் மூலம் பரவும் பெரும்பாலான ஹெபாடைடிஸ் நோய்களுக்கு என்ன காரணம் என்பது தெரியாமல் இருந்தது.

ஆனால், ஹெபாடைடிஸ் சி வைரஸ் கண்டுபிடிப்பால், நாள்பட்ட ஹெபாடைடிஸ் நோய்களுக்கு விளக்கம் கிடைத்தது. இது, புதிய மருந்துகள் கண்டுபிடிப்புக்கு வழிவகுத்தது. ரத்த பரிசோதனையும் பயன்பாட்டுக்கு வந்தது.

அதன்மூலம், லட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்ற முடிந்ததாக நோபல் பரிசு கமிட்டி கூறியுள்ளது.

உலகில் இருந்து ஹெபாடைடிஸ் சி வைரசை ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளதாகவும், வைரஸ் நோய்களுக்கு எதிரான நீண்டகால போராட்டத்தில் இது முக்கிய சாதனை என்றும் பாராட்டு தெரிவித்துள்ளது.

Next Story