அமெரிக்காவில் எச்-ஒன் பி விசா பெற கட்டுப்பாடுகள் கடுமை; இந்திய தொழிலாளர்கள் - நிறுவனங்களுக்கு பாதிப்பு


அமெரிக்காவில் எச்-ஒன் பி விசா பெற கட்டுப்பாடுகள் கடுமை; இந்திய தொழிலாளர்கள் - நிறுவனங்களுக்கு பாதிப்பு
x
தினத்தந்தி 7 Oct 2020 12:37 PM GMT (Updated: 7 Oct 2020 12:37 PM GMT)

அமெரிக்காவில் குடியேற எச்-ஒன் பி விசாக்களை பெறுவதற்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் இந்திய தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படும்.

வாஷிங்டன்

கொரோனா தொற்று நெருக்கடி காரணமாக பல நாடுகள் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பினை எதிர்கொண் டு வருகின்றன. இந்த நிலையில் அமெரிக்காவிலும் இதன் தாக்கம் தலைதூக்கியுள்ளது. உள்நாட்டு மக்களுக்கான வேலை வாய்ப்பு குறித்து பெரும் சர்ச்சைகள் எழத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் அந்நாட்டு ஜனாதிபதிடொனால்ட் டிரம்பின் நிர்வாகம் தொழில் முறை விசாவுக்கான புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.இதன்படி, எச்-ஒன் பி விசாக்களை பெறுவதற்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இதன் முழு விவரம் தற்போது வெளியிடப்படவில்லையென்றாலும் கூட வருடத்திற்கு 85,000 எச்-ஒன் பி விசாக்களை அனுமதிக்கும். அமெரிக்கா பின்வரும் நாட்களின் இந்த எண்ணிக்கையை கணிசமாக குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.அரசு நிர்வாகத்தின் இந்த முடிவு மீது 60 நாட்கள் வரை கருத்து தெரிவிக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு ஆண்டும் 85,000 எச் -1 பி விசாக்களை அமெரிக்கா வெளியிடுகிறது, அதில் 65,000 "சிறப்புத் தொழில்களில்" உள்ளவர்களுக்கும் 20,000 பேர் முதுகலை அல்லது அமெரிக்காவில் உயர் பட்டப்படிப்பை முடித்த வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கும் செல்லும்.

இந்த விசாவை இந்தியா மற்றும் சீனாவிலிருந்து நடுத்தர மற்றும் உயர் திறமையான தொழில்நுட்ப தொழிலாளர்கள் அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்ற பரவலாகப் பயன்படுத்துகின்றனர். ஏப்ரல் 1, 2020 நிலவரப்படி, யு.எஸ்.சி.ஐ.எஸ் 2.5 லட்சம் எச் -1 பி விசா விண்ணப்பங்களைப் பெற்றது, அதில் 1.84 லட்சம் அல்லது அனைத்து விண்ணப்பங்களிலும் 67 சதவீதம்  இந்தியர்களிடமிருந்து வந்தவை. “சிறப்பு வேலைகள்” என்ற வரையறையை டி.எச்.எஸ் மாற்றியமைப்பது பிரிவின் கீழ் வழங்கப்பட்ட 65,000 விசாக்களைக் குறைக்கும்.

எச் -1 பி விசாக்களில் ஏற்கனவே அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்களுக்கு ஊதிய உயர்வுக்கான நடவடிக்கை நன்றாக இருக்கும், இரண்டாவது விதி புதிய விண்ணப்பதாரர்கள் வேலைக்காக அமெரிக்காவிற்கு குடியேறுவது கடினமாக்கும்.

பொதுவாக சிலிக்கான் வேலி எனப்படும் தெற்கு சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதியை தளமாக கொண்டு செயல்படக்கூடிய கூகுகிள், ஆப்பிள், பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் இந்தியா போன்ற பல நாடுகளிலிருந்து திறமையானவர்களை எச்-ஒன் பி விசாக்கள் மூலமாக அமெரிக்காவுக்கு அதிக அளவில் கொண்டு வருகின்றது.

இந்நிலையில், உள்நாட்டு மக்களுக்கான வேலை வாய்ப்பு குறித்த கோரிக்கைகள் முன்னெழுந்துள்ள நிலையில், "பொருளாதாரப் பாதுகாப்பு உள்நாட்டுப் பாதுகாப்பின் ஒரு அங்கமாக இருக்கும் ஒரு சகாப்தத்தில் நாங்கள் நுழைந்துள்ளோம், இதன் மூலமாக உள்நாட்டில் திறமையானவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும்." என உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் சாட் வுல்ஃப் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம், சான் பிரான்சிஸ்கோவில் உள்ள அமெரிக்க மாவட்ட நீதிபதி ஜெஃப்ரி வைட் எச்-ஒன் பி விசா நடைமுறையை முடிவுக்கு கொண்டுவரும் அரசின் முயற்சிக்கு அதிருப்தி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story