அஜர்பைஜான்-ஆர்மேனியா இடையே 2-வது சண்டை நிறுத்தம்


அஜர்பைஜான்-ஆர்மேனியா இடையே 2-வது சண்டை நிறுத்தம்
x
தினத்தந்தி 18 Oct 2020 7:58 PM GMT (Updated: 18 Oct 2020 7:58 PM GMT)

ரஷியாவின் சமாதான முயற்சியின் மூலம் இரு நாடுகளும் சண்டை நிறுத்தத்துக்கு சம்மதம் தெரிவித்து, கடந்த 10-ந் தேதி அங்கு சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்தது

பாகு, 

சர்ச்சைக்குரிய நாகோர்னோ காராபாக் பிராந்தியம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக அஜர்பைஜான் மற்றும் ஆர்மேனியா நாடுகளுக்கு இடையில் கடந்த ஒரு மாதமாக நடந்து வரும் மோதல்களில் நூற்றுக்கணக்கான வீரர்கள் மற்றும் அப்பாவி மக்கள் பலியாகினர். இதையடுத்து ரஷியாவின் சமாதான முயற்சியின் மூலம் இரு நாடுகளும் சண்டை நிறுத்தத்துக்கு சம்மதம் தெரிவித்து, கடந்த 10-ந் தேதி அங்கு சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்தது. 

ஆனால் இந்த சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்து ஒரு நாளுக்குள்ளாகவே இரு நாடுகளும் மீண்டும் மோதலில் ஈடுபட்டன. பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக இருநாடுகளும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வந்தன.

இந்த விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்று (திங்கட்கிழமை) கூடி விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில், மனிதாபிமான அடிப்படையில் சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொள்வதாக இரு நாடுகளும் நேற்று முன்தினம் அறிவித்தன. அதன்படி நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் இந்த 2-வது சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்ததாக இரு நாடுகள் தரப்பிலும் அறிவிக்கப்பட்டது.


Next Story