கொரோனா தடுப்பூசி மருத்துவ பரிசோதனை: பிரேசிலில் தன்னார்வலர் உயிரிழப்பு


கொரோனா தடுப்பூசி மருத்துவ பரிசோதனை:  பிரேசிலில்  தன்னார்வலர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 21 Oct 2020 6:02 PM GMT (Updated: 21 Oct 2020 6:30 PM GMT)

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆஸ்ட்ரா செனகா நிறுவனம் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தை தயாரித்தது. மருத்துவ பரிசோதனையில் இந்த மருந்து உள்ளது.

ரியோடி ஜெனிரியா,

உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. உலக அளவில் பல்வேறு தடுப்பூசிகள் மருத்துவ பரிசோதனையின் பல்வேறு கட்டங்களில் உள்ளன. எனினும், இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆஸ்ட்ரா செனகா நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. உலகின் பல நாடுகள் ஆஸ்ட்ரா செனகா தடுப்பூசியை மருத்துவ பரிசோதனையில் வைத்துள்ளன. 

இந்த நிலையில், ஆஸ்ட்ரா செனகா தடுப்பூசி பரிசோதனை நடத்தப்பட்டு வரும் பிரேசிலில், தன்னார்வலர்  ஒருவர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரேசில் சுகாதார  ஆணையம்,   தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் உயிரிழந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு  தகவல்களை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. தன்னார்வலர் உயிரிழந்த போதிலும் கொரோனா தடுப்பூசி பரிசோதனை தொடர்ந்து நடைபெறும் எனவும் பிரேசில் சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. 

உயிரிழந்த தன்னார்வலர் பிரேசில் நாட்டை சேர்ந்தவர் என்ற தகவல் மட்டுமே பகிரப்பட்டுள்ளது. சோதனைகளில் ஈடுபடுவோரின் மருத்துவ இரகசியத்தன்மையை மேற்கோள் காட்டி வேறு எந்த தகவலையும்  பிரேசில் வெளியிடவில்லை.  தன்னார்வலர் உயிரிழந்ததையடுத்து, ஆஸ்ட்ரா செனகா நிறுவனத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சி அடைந்து எதிர்மறை எண்களாக சென்றன. சுமார்  1.7 சதவிதம் அளவுக்கு பங்குகள் சரிந்தன. 

ஆஸ்ட்ரா செனகா நிறுவனத்திடம் இருந்து பெருமளவு தடுப்பூசிகளை கொள்முதல் செய்யவும் தங்கள் நாட்டிலேயே இந்த மருந்துகளை உற்பத்தி செய்யவும் பிரேசில் அரசு திட்டமிட்டுள்ளது.  ஆஸ்ட்ரா செனகா தடுப்பூசியை தவிர சீனாவின் சினோவேக் தடுப்பு மருந்து பரிசோதனையும் பிரேசிலில் நடைபெற்று வருகிறது.  உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் அதிக அளவு உயிரிழப்பை சந்தித்த நாடுகள் பட்டியலில் பிரேசில் உள்ளது. பிரேசிலில்  சுமார் 1 லட்சத்து 54 ஆயிரம் பேர் தொற்று பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர். 

Next Story