கொரோனா தொற்றில் இருந்து விடுபட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகும் நுரையீரல் பாதிப்பு இருக்கும் - ஆய்வில் தகவல்


கொரோனா தொற்றில் இருந்து விடுபட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகும் நுரையீரல் பாதிப்பு இருக்கும்  - ஆய்வில் தகவல்
x
தினத்தந்தி 1 Dec 2020 11:56 AM GMT (Updated: 1 Dec 2020 11:56 AM GMT)

கொரோனா தொற்றில் இருந்து விடுபட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகும் நுரையீரல் பாதிப்பு இருப்பது ஆய்வில் தெரியவந்து உள்ளது.

லண்டன்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு மூன்று மாதங்களுக்கு பிறகும் நுரையீரல் பாதிப்பு இருப்பது இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

சாதாரண ஸ்கேனிங் முறைகளால் கண்டறியப்பட முடியாத பாதிப்பை அறிவதற்காக புதிய ஸ்கேனிங் தொழில்நுட்பத்தை கொண்டு 10 நோயாளிடம் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இது குறித்து தெரியவந்துள்ளது.

இந்த புதிய முறையில், எம்.ஆர்.ஐ ஸ்கேன்களின் போது செனான் எனப்படும் வாயுவைப் பயன்படுத்தி நுரையீரல் சேதம் குறித்து கண்டறியப்படுகிறது. இந்த செயல்முறையின்போது நோயாளிகள் செனான் வாயுவை உள்ளிழுக்கின்றனர்.

நுரையீரலில் ஏற்படக்கூடிய நீண்டகால சேதத்தை கண்டறியக்கூடிய இந்த சோதனை கொரோனா  நோயாளிகளுக்கு நிவாரணமளிக்கும் என்று நுரையீரல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த ஆய்வுக்கு தலைமை வகிக்கும் பேராசிரியர் ஃபெர்கஸ் க்ளீசன், இந்த புதிய ஸ்கேனிங் முறையை 19 மற்றும் 69 வயதுக்கு உட்பட்ட 10 நோயாளிகளிடம் பரிசோதனை செய்துள்ளார்.

ஆய்வில் பங்கேற்ற பத்தில் எட்டு பேருக்கு கொரோனா வைரஸால் நோய்வாய்ப்பட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகும் தொடர்ந்து மூச்சுத் திணறல் மற்றும் சோர்வு காணப்பட்டது. அவர்களில் யாருக்கும் தீவிர சிகிச்சை தேவைப்படவில்லை என்றாலும், வழக்கமான ஸ்கேன்களில் அவர்களின் நுரையீரலில் எந்தப் பிரச்சினையும் கண்டறியப்பட முடியாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில், மூச்சுத் திணறல் தொடர்பான பிரச்சினைகளை கொண்ட எட்டு பேரையும் இந்த ஆய்வில் பங்கேற்ற செய்ததன் மூலம், அவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு இருப்பது ஸ்கேன் மூலம் உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து  கொரோனா   பாதிப்புக்கு பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்படாத, தீவிர பிரச்சினையை சந்திக்காத 100 பேரை பரிசோதனைக்கு உட்படுத்தி இந்த முடிவின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய பேராசிரியர் க்ளீசன் முடிவு செய்துள்ளார்.

Next Story