அமெரிக்க அரசு மீது சைபர் தாக்குதல்: முக்கிய துறைகள் ஆபத்தில் இருப்பதாக எச்சரிக்கை


அமெரிக்க அரசு மீது சைபர் தாக்குதல்: முக்கிய துறைகள் ஆபத்தில் இருப்பதாக எச்சரிக்கை
x
தினத்தந்தி 19 Dec 2020 12:44 AM GMT (Updated: 19 Dec 2020 12:44 AM GMT)

அமெரிக்க அரசு மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து அரசின் முக்கிய துறைகள் ஆபத்தில் இருப்பதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

வாஷிங்டன்,

அமெரிக்க அரசின் முக்கிய துறைகளின் கம்ப்யூட்டர்களில் ஹேக்கர்கள் ஊடுருவி உளவு பார்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அரசின் முக்கிய துறைகளை குறிவைத்து பல மாதங்களாக இந்த சைபர் தாக்குதல் தொடர்ந்து நடந்து கொண்டிருந்ததை, அமெரிக்க அதிகாரிகள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.

இந்த தாக்குதலால் அமெரிக்காவின் அரசு முகமைகள், முக்கிய அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆபத்தில் இருப்பதாக அதிகாரிகள் எச்சரித்து இருக்கிறார்கள். இந்த சைபர் தாக்குதலை தடுப்பது மிகவும் சிக்கலானது என அமெரிக்காவின் சைபர் பாதுகாப்பு மற்றும் கட்டமைப்பு பாதுகாப்பு முகமை (சி.ஐ.எஸ்.ஏ) கூறியுள்ளது. ரஷியா இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் ரஷியா இதை மறுத்திருக்கிறது. 

இந்த சைபர் தாக்குதல் குறித்து சி.ஐ.எஸ்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

இது மிக நுட்பமான, தொடர் தாக்குதல். இந்த சைபர் தாக்குதலில் அமெரிக்காவின் அரசு முகமைகள், முக்கிய அரசு அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் குறிவைக்கப்பட்டன. இந்த தாக்குதல், கடந்த மார்ச் மாதத்தில் தொடங்கி இருக்கலாம் என்று தெரிகிறது. இந்த சைபர் தாக்குதலுக்கு பின் யார் இருக்கிறார்கள்? எந்த முகமைகள் மற்றும் அமைப்புகள் மீது இந்த தாக்குதல் நடந்தது, என்ன மாதிரியான விவரங்கள் திருடப்பட்டன என்பன உள்ளிட்டவை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த சோலார் விண்ட்ஸ் என்கிற ஐ.டி. நிறுவனத்தின், நெட்வொர்க் மேனேஜ்மெண்ட் மென்பொருளைப் பயன்படுத்திதான், சைபர் தாக்குதல் நடத்தியவர்கள், அமெரிக்காவின் முக்கிய கம்ப்யூட்டர்களில் நுழைந்துள்ளனர்.

எனவே, சோலார் விண்ட்ஸ் நிறுவனத்தின் நெட்வொர்க் மேனேஜ்மெண்ட் மென்பொருளை, தங்களின் சர்வர்களில் இருந்து நீக்குமாறு, அமெரிக்காவின் அனைத்து சிவில் முகமைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. சோலார் விண்ட்ஸ் நிறுவனத்தின் மென்பொருளைத் தவிர, வேறு ஏதாவது வழிகளில் தாக்குதல் நடத்தியவர்கள் நுழைந்திருக்கிறார்களா? என்பதை விசாரித்து வருகிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலை நடத்தியவர்கள், அமெரிக்காவின் உள்துறை, பாதுகாப்பு, உள்நாட்டு பாதுகாப்பு, நிதி மற்றும் வணிகம் போன்ற துறைகளின் தரவுகளை உளவு பார்த்திருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் அமெரிக்காவின் எரிசக்தித்துறை மற்றும் தேசிய அணுசக்தி பாதுகாப்பு நிர்வாகத்துறை ஆகியவை தொடர்புடைய நெட்வொர்க்குகளில், தாக்குதல் நடத்தியவர்கள் நுழைந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சைபர் தாக்குதல் பற்றி அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் ஜோ பைடன் கூறுகையில், “எனது நிர்வாகத்தில் சைபர் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். முதலில் சைபர் தாக்குதல்களை நடத்தும் எதிரிகளை நாம் தடுக்க வேண்டும். நம் கூட்டாளிகள் மற்றும் நம் நட்பு நாடுகளுடன் சேர்ந்து, இதுபோன்ற தீங்கிழைக்கும் தாக்குதல்களுக்கு காரணமானவர்கள் மீது கணிசமான அபராதங்களை விதிப்பதன் மூலம் அதைச் செய்வோம்” என கூறினார்.

Next Story