ரஷியா மீது பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா


Photo credit: AFP
x
Photo credit: AFP
தினத்தந்தி 3 March 2021 12:19 AM GMT (Updated: 3 March 2021 12:32 AM GMT)

நவால்னி விவகாரத்தில் ரஷிய அரசின் மூத்த அதிகாரிகள் 7 பேர் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது

வாஷிங்டன்,

ரஷிய அதிபர் புதினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையாக விமர்சித்து வந்த எதிர்க்கட்சி தலைவரான அலெக்சி நவால்னி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரசாயன தாக்குதலுக்கு ஆளானார். இதில் கோமா நிலைக்கு சென்ற நவால்னி, ஜெர்மனியில் சிகிச்சை பெற்று குணமடைந்தார்.‌ அதனைத்தொடர்ந்து கடந்த ஜனவரி 17-ந்தேதி ஜெர்மனியில் இருந்து ரஷியா திரும்பிய அவரை விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து மோசடி வழக்கு ஒன்றில் பரோல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் நவால்னிக்கு 2 ஆண்டுகள் 8 மாதம் சிறை தண்டனை விதித்து ரஷிய கோர்ட்டு தீர்ப்பளித்தது.

இதனிடையே இந்த விவகாரத்தில் ரஷியாவுக்கு அமெரிக்கா தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.‌‌ அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதற்குப் பிறகு முதல் முறையாக ரஷிய அதிபர் புதினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய ஜோ பைடன், எதிர்க்கட்சித்தலைவர் நவால்னி மீதான நடவடிக்கை குறித்து கவலை தெரிவித்தார்.‌

இந்தநிலையில் நவால்னி விவகாரத்தில் ரஷிய அரசின் மூத்த அதிகாரிகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் மீது அமெரிக்கா நேற்று பொருளாதார தடைகளை விதித்தது, பேரழிவு ஆயுதங்கள் பயன்பாடு தடைச் சட்டம் 2005 மற்றும் ரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்கள் கட்டுப்பாடு மற்றும் போர் ஒழிப்பு சட்டம் 1991 ஆகியவற்றின் கீழ் ரஷியா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜோ பைடன் நிர்வாகம் ரஷியா மீது விதித்துள்ள முதல் பொருளாதாரத்தடை இது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story