ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கு போலீஸ் அதிகாரி டெரெக் சாவின் குற்றவாளி என அறிவிப்பு அமெரிக்க கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு


ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கு போலீஸ் அதிகாரி டெரெக் சாவின் குற்றவாளி என அறிவிப்பு அமெரிக்க கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
x
தினத்தந்தி 22 April 2021 2:57 AM GMT (Updated: 22 April 2021 2:57 AM GMT)

ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கில் போலீஸ் அதிகாரி டெரெக் சாவினை குற்றவாளி என அறிவித்து அமெரிக்க கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பளித்தது.

வாஷிங்டன், 

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம் மினியாபொலிஸ் நகரில் கடந்த ஆண்டு மே மாதம் 25-ந் தேதி, கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற குற்றச்சாட்டில் ஜார்ஜ் பிளாய்ட் என்கிற ஆப்பிரிக்க அமெரிக்கரை போலீசார் கைது செய்தனர். அப்போது அவர் போலீஸ் வாகனத்தில் ஏற மறுத்ததால் போலீஸ் அதிகாரி டெரெக் சாவின் என்பவர் ஜார்ஜ் பிளாய்ட்டை தரையில் கிடத்தி அவர் கழுத்தை கால் முட்டியால் அழுத்தினார்.

‘‘என்னால் மூச்சுவிட முடியவில்லை எழுந்திருங்கள்’’ என ஜார்ஜ் பிளாய்ட் கெஞ்சிய போதும் டெரெக் சாவின் அவரை விடவில்லை. இதனால் சிறிது நேரத்தில் ஜார்ஜ் பிளாய்ட் உயிரிழந்தார்.

இதனிடையே ஜார்ஜ் பிளாயாட் கழுத்தில் போலீஸ் அதிகாரி கால் முட்டியை வைத்து அழுத்தியது, இதனால் அவர் மூச்சு விட முடியாமல் திணறி உயிரிழந்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.

இதனைத் தொடர்ந்து ஜார்ஜ் பிளாய்ட்டின் சாவுக்கு நீதி கேட்டு அமெரிக்கா முழுவதும் பெரும் போராட்டம் வெடித்தது. இனவெறிக்கு எதிராகவும் போலீசாரின் காட்டுமிராண்டித்தனத்தை கண்டித்தும் நடந்த இந்தப் போராட்டங்கள் அமெரிக்காவையே உலுக்கியதோடு, உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்தது.

இதன் எதிரொலியாக போலீஸ் அதிகாரி டெரெக் சாவின் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். அவர் மீது இரண்டாம் நிலை தற்செயலாக கொலை செய்தல், மூன்றாம் நிலை கொலை மற்றும் இரண்டாம் நிலை மனித கொலையில் ஈடுபட்டது ஆகிய 3 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த நிலையில் டெரெக் சாவின் மீதான கொலை வழக்கு மினியாபொலிஸ் நகரில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. 12 நீதிபதிகளை கொண்ட அமர்வு இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வந்தது.‌ இந்த சூழலில் இந்த வழக்கின் பரபரப்பான இறுதி விசாரணை கடந்த திங்கட்கிழமை நடந்து முடிந்தது.‌

அதனை தொடர்ந்து இந்த வழக்கில் தீர்ப்பு வழங்குவதற்காக கோர்ட்டு நேற்று முன்தினம் மீண்டும் கூடியது. அப்போது டெரெக் சாவின் மீதான 3 குற்றச்சாட்டுகளும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் அவரை குற்றவாளி என அறிவித்து நீதிபதிகள் 12 பேரும் ஏகமனதாக தீர்ப்பளித்தனர்.

நீதிபதிகள் தீர்ப்பை வாசித்த போது கோர்ட்டு அறையில் இருந்த டெரெக் சாவின் இறுக்கமான முகத்துடன் காணப்பட்டார். தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து டெரெக் சாவினுக்கு வழங்கப்பட்டிருந்த ஜாமீன் ரத்து செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து போலீசார் அவரது கைகளில் விலங்கு பூட்டி கோர்ட்டில் இருந்து அழைத்து சென்றனர்.

முன்னதாக நீதிபதிகள் தீர்ப்பை வாசித்தபோது, கோர்ட்டுக்கு வெளியே திரண்டிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் தீர்ப்பை வரவேற்று ஆரவாரம் செய்தனர்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஆகிய இருவரும் இந்த தீர்ப்பை வரவேற்றனர். மேலும் அவர்கள் தீர்ப்பு வெளியானதும் ஜார்ஜ் பிளாய்ட் குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினர்.

அப்போது ஜோ பைடன் ‘‘குறைந்தபட்சம் இப்போது கொஞ்சம் நீதி கிடைத்துள்ளது. நாங்கள் இன்னும் நிறைய செய்ய உள்ளோம். அமைப்பு ரீதியான இனவெறியைக் கையாள்வதில் இது முதல் அடியாக இருக்கும்’’ என கூறினார்.

இதனிடையே அமெரிக்காவில் போலீஸ் துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ள ஜார்ஜ் பிளாய்ட் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

‘‘இந்த மசோதா நம் பாரம்பரியத்தின் ஓர் அங்கம். இது நாம் நீண்ட காலமாக செய்யக் கடமைப்பட்டுள்ள ஒன்று’’ என அவர் கூறினார்.

இதனிடையே இந்த வழக்கில் டெரெக் சாவினுக்கான தண்டனை விபரம் விரைவில் அறிவிக்கப்படும் என கோர்ட்டு தெரிவித்துள்ளது. டெரெக் சாவினுக்கு குறைந்தபட்சம் 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கோர்ட்டு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளையில் டெரெக் சாவின் தனக்கு எதிரான தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Next Story