ஆப்கானிஸ்தானில் திருமண நிகழ்ச்சியில் பீரங்கி குண்டு வீச்சு; 7 பேர் உடல் சிதறி பலி


ஆப்கானிஸ்தானில் திருமண நிகழ்ச்சியில் பீரங்கி குண்டு வீச்சு; 7 பேர் உடல் சிதறி பலி
x
தினத்தந்தி 30 May 2021 7:55 PM GMT (Updated: 30 May 2021 7:55 PM GMT)

ஆப்கானிஸ்தானில் சமீபகாலமாக தலீபான் பயங்கரவாதிகள் அரசுக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளனர்.

அதேவேளையில் ஆப்கானிஸ்தான் ராணுவமும் தலீபான் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது. இந்தநிலையில் ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள கபிஷா மாகாணத்தின் டகாப் மாவட்டத்தில் நேற்று பீரங்கி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.அப்போது ஒரு பீரங்கி குண்டு அங்கு திருமண நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த ஒரு வீட்டில் விழுந்து வெடித்தது.

இதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள் ஆவர். மேலும் இந்த பீரங்கி குண்டு வெடிப்பில் 4 பேர் படுகாயமடைந்தனர்.இந்த பீரங்கி குண்டு தாக்குதலுக்கு தலீபான் பயங்கரவாதிகள் காரணம் என அரசும், அரசுதான் காரணம் என தலீபான் பயங்கரவாத அமைப்பும் பரஸ்பர குற்றம்சாட்டியுள்ளன.பொதுமக்களைப் பாதுகாக்க இரு தரப்பினரும் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஐ.நா. சபை பலமுறை வலியுறுத்தியுள்ளது.

இந்த ஆண்டின் முதல் 3 மாதங்களில் ஆப்கானிஸ்தானில் 1,783 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாகவும், இது கடந்தாண்டின் இதே காலப்பகுதியை விட 29 சதவீதம் அதிகம் என்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.நா. குழு தெரிவித்துள்ளது.

 


Next Story