சீனாவில் இதுவரை 80 கோடி தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்


சீனாவில் இதுவரை 80 கோடி தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்
x
தினத்தந்தி 9 Jun 2021 9:19 AM GMT (Updated: 9 Jun 2021 9:19 AM GMT)

சீனாவில் இதுவரை 80 கோடி தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பீஜிங்,

உலகில் முதன் முதலாக சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. தற்போது அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருக்க, சீனா கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது.

இதற்கிடையில், சீனாவில் மீண்டும் கொரோனா தலைக்காட்டத் துவங்கியுள்ளது. நேற்றைய நிலவரப்படி சீனாவில் புதிதாக 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் 33 பேருக்கு தொற்று உறுதியானதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தவிர 9 பேருக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அறிகுறி இல்லாத தொற்று பாதிப்புகளை உறுதி செய்யப்பட்ட பாதிப்பாக சீன சுகாதாரத்துறை அறிவிப்பதில்லை. தற்போதைய நிலவரப்படி குவாங்டாங் மாகாணத்தில் தொற்று பரவி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. 

இந்த புதிய பாதிப்புகளின் மூலம் சீனாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 91,316 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கொரோனாவால் அங்கு இதுவரை 4,636  பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சீனாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுவரும் தடுப்பூசிகளை சீனா பயன்படுத்தி வருகிறது. 

தற்போதைய நிலவரப்படி, சீனாவில் இதுவரை மொத்தம் 80 கோடியே 8 லட்சத்து 96 ஆயிரம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது என அந்நாட்டு சுகாதாரத்துறை அமைப்பு தெரிவித்துள்ளது. குறிப்பாக, நேற்று ஒரேநாளில் 1 கோடியே 48 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது என சீன அரசு தெரிவித்துள்ளது.

சீனாவின் மொத்த மக்கள் தொகை 139 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story