ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் சிறிய ரக விமானங்கள் விபத்து - 5 பேர் பலி


ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் சிறிய ரக விமானங்கள் விபத்து - 5 பேர் பலி
x
தினத்தந்தி 15 Jun 2021 4:38 AM GMT (Updated: 15 Jun 2021 4:38 AM GMT)

சுவிட்சர்லாந்து மலைத்தொடர் பகுதியில் இரண்டு சிறிய ரக விமானங்கள் விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். இரு விமானங்களும் நேருக்கு நேர் மோதியதா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

பெர்ன்ஸ்,

சுவிட்சர்லாந்து நாட்டின் ஆல்ப்ஸ் மலைத்தொடர் பகுதியில் இரண்டு சிறிய ரக விமானங்கள் கடந்த சனிக்கிழமை பயணித்தன. ஒரு விமானத்தில் விமானி மட்டும் பயணித்தார். மற்றொரு விமானத்தில் குழந்தை உள்பட 4 பேர் பயணித்துள்ளனர்.

ஆல்ப்ஸ் மலைத்தொடரின் கிழக்கே ஹுபர்டன் என்ற பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது இரண்டு விமானங்களும் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. ஆனால், 4 பேர் பயணித்த சிறிய ரக விமானம் மாயமானதாக தகவல் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து அந்த சிறிய ரக விமானத்தை தேடும் பணியில் மட்டும் மீட்புக்குழுவினர் ஈடுபட்டனர்.

நீண்ட தேடுதலுக்கு பின்னர் 4 பேர் பயணித்த சிறிய ரக விமானம் ஆல்ப்ஸ் மலைத்தொடரின் ஹுபர்டன் பகுதியில் விபத்துக்குள்ளானதை மீட்புகுழுவினர் கண்டுபிடித்தனர். இந்த விபத்தில் அந்த விமானத்தில் பயணம் செய்த 4 பேரும் உயிரிழந்தனர். 

விபத்து நடைபெற்ற பகுதிக்கு அருகே மற்றொரு சிறிய ரக விமானத்தையும் மீட்புக்குழுவினர் கண்டுபிடித்தனர். அந்த விமானத்தில் விமானி உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து 5 பேரின் உடல்களையும் மீட்ட மீட்புக்குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரு விமானங்களும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.  

Next Story