இந்தியாவுக்கு பைசர் தடுப்பூசி வினியோகம் செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடும் பணி இறுதிக்கட்டத்தில் உள்ளது - பைசர் நிறுவனம்


இந்தியாவுக்கு பைசர் தடுப்பூசி வினியோகம் செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடும் பணி இறுதிக்கட்டத்தில் உள்ளது - பைசர் நிறுவனம்
x
தினத்தந்தி 23 Jun 2021 4:29 AM GMT (Updated: 23 Jun 2021 4:29 AM GMT)

இந்தியாவுக்கு ‘பைசர்’ நிறுவன தடுப்பூசி வினியோகம் செய்வது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்திடும் பணி இறுதிக்கட்டத்தில் இருப்பதாக பைசர் நிறுவனம் கூறியுள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் முன்னணி மருந்து நிறுவனமான ‘பைசர்’, கொரோனா தடுப்பூசி தயாரித்து பல நாடுகளுக்கு வினியோகித்து வருகிறது. வாஷிங்டனில், அமெரிக்க-இந்திய வர்த்தக கூட்டமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில், ‘பைசர்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆல்பர்ட் பவுர்லா பேசியதாவது:-

இந்த ஆண்டு 300 கோடி டோஸ் தடுப்பூசியும், அடுத்த ஆண்டு 400 கோடி தடுப்பூசியும் உற்பத்தி செய்வோம். இந்தியா உள்ளிட்ட நடுத்தர, குறைந்த வருவாய் நாடுகளுக்கு 200 கோடி டோஸ் தடுப்பூசி வழங்க திட்டம் வகுத்துள்ளோம்.

இந்தியாவில் பைசர் தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டால் மட்டுமே நாங்கள் வினியோகிக்க முடியும். தற்போது, அங்கீகாரம் பெறும் பணிகள் நடந்து வருகின்றன. அதையடுத்து, இந்தியாவுக்கு தடுப்பூசி வினியோகம் செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்படும். அது விரைவில் நடைபெறும் என நம்புகிறேன்.

உள்நாட்டில் சீரம் நிறுவனம் தயாரித்த தடுப்பூசிகள் இந்திய மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முதுகெலும்பாக திகழும். அத்துடன், எங்களது தடுப்பூசிகளும் முக்கிய பங்கு வகிக்கும்.

கொரோனா உச்சத்தில் இருந்தபோது, இந்தியா நரகத்தையே கடந்து வந்தது. இந்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் நல்ல பலனை அளித்துள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story