கொரோனா பாதிப்பு அதிகரிப்பை தடுக்க நடவடிக்கை: ஓமனில் இரவு நேர ஊரடங்கு மீண்டும் அமல்


கொரோனா பாதிப்பு அதிகரிப்பை தடுக்க நடவடிக்கை: ஓமனில் இரவு நேர ஊரடங்கு மீண்டும் அமல்
x
தினத்தந்தி 25 July 2021 12:57 AM GMT (Updated: 25 July 2021 12:57 AM GMT)

ஓமன் நாட்டில் சமீபத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்தது. இதனால் தினசரி தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இதையடுத்து ஓமன் சுகாதாரத்துறை, பக்ரீத் விடுமுறையால் மேலும் கூட்டம் கூடுவது அதிகரித்துவிடும் என்பதற்காக முழு ஊரடங்கை அமல்படுத்தியது. தற்போது இந்த ஊரடங்கு நேற்று காலை 4 மணியுடன் நிறைவடைந்தது.

இந்த நிலையில், ஓமன் அரசு நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு தொடந்து அமலில் இருக்கும் என அறிவித்துள்ளது. அதன்படி, தினமும் மாலை 5 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எதற்காகவும் வெளியில் வர வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. இந்த நேரங்களில் வர்த்தக நடவடிக்கைகள் எதுவும் இருக்காது. இதேபோல பஸ் போன்ற போக்குவரத்து சேவைகளும் இருக்காது. எனினும் அவசர சேவையான மருத்துவம், மின்சாரம், போலீஸ் போன்ற துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

பொதுமக்கள் கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் வெளியில் செல்லும் போது முக கவசம் அணிந்து செல்ல வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். மேலும் வீடுகளில் கூட்டம் சேர்ப்பது உள்ளிட்ட நிகழ்வுகளை தவிர்த்துக் கொள்ள வேண்டும். விதிமீறலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

வருகிற 31-ந் தேதி இரவு வரை இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் என ஓமன் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story