3 முதல் 17 வயதுடையவர்களுக்கு சினோபார்ம் தடுப்பூசி போட அனுமதி: அமீரக சுகாதார அமைச்சகம்


3 முதல் 17 வயதுடையவர்களுக்கு சினோபார்ம் தடுப்பூசி போட அனுமதி: அமீரக சுகாதார அமைச்சகம்
x
தினத்தந்தி 3 Aug 2021 3:34 AM GMT (Updated: 3 Aug 2021 3:34 AM GMT)

900 சிறுவர்களுக்கு செய்யப்பட்ட பரிசோதனையையடுத்து, அமீரகத்தில் 3 வயது முதல் 17 வயதுடைய சிறுவர், சிறுமியருக்கு சினோபார்ம் தடுப்பூசியை போட்டுக்கொள்ள சுகாதார அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

குழந்தைகளுக்கும் கொரோனா தொற்று
அமீரகத்தில் தேசிய கொரோனா தடுப்பூசி திட்டத்தின் கீழ் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்கள் சினோபார்ம், அஸ்ட்ரா ஜெனேகா, ஸ்புட்னிக் வி போன்ற பல்வேறு தடுப்பூசிகளை போட்டுக்கொள்கின்றனர்.தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர், சிறுமியருக்கும் கொரோனா தடுப்பூசியானது போடப்பட்டு வருகிறது.இதற்கிடையே உலக அளவில் சிறு குழந்தைகளுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமீரகத்தில் 3 வயது நிறைவடைந்த குழந்தைகள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை வழங்க அரசு சார்பில் முடிவு செய்யப்பட்டது.

900 சிறுவர், சிறுமிகளிடம்...
இதில், அந்த தடுப்பூசி போடுவதால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக, அபுதாபியில் கடந்த ஜூன் மாதம் சினோபார்ம் தடுப்பூசி 3 வயது முதல் 17 வயதுடையவர்களுக்கு எந்த அளவில் நோய் எதிர்ப்புத்தன்மையை 
கூட்டுகிறது? என்பது குறித்து ஆய்வு செய்யும் பணிகளானது தொடங்கியது. உலக அளவில் கொரோனா தடுப்பூசியை தயாரிக்கும் சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் கடந்த சில மாதங்களாக இதுபோன்ற மருத்துவ சோதனைகள் நடைபெற்று வருகிறது. அதேபோல மத்திய கிழக்கு நாடுகளில் அமீரகத்தில் இந்த ஆய்வுகள் நடைபெற்றது முதல் முறையாகும். சர்வதேச மருத்துவ விதிமுறைகளை கடைபிடித்து அபுதாபி சுகாதாரத்துறையின் ஒத்துழைப்பில் 3 வயது முதல் 17 வயதுடைய அமீரகத்தில் வசிக்கும் அனைத்து நாடுகளை சேர்ந்த 900 சிறுவர், சிறுமிகளிடம் இந்த ஆய்வுகள் நடைபெற்றது.

3-17 வயதுடையவர்களுக்கு அனுமதி
தன்னார்வலர்களாக வருபவர்கள் மற்றும் பெற்றோர்களின் பாதுகாப்பில் வரும் குழந்தைகளுக்கு சினோபார்ம் தடுப்பூசி போடப்பட்டு சுகாதார அமைச்சகத்தால் கடந்த ஜூன் மாதம் முதல் கண்காணிக்கப்பட்டு வந்தது.ஓவ்வொருவரின் 
தனிப்பட்ட நோய் எதிர்ப்புத்தன்மை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டது. தற்போது இந்த ஆய்வின் முடிவில், அவசர பயன்பாடு மற்றும் உள்நாட்டு மதிப்பீடுகளின் அடிப்படையில் அமீரகத்தில் 3 வயது முதல் 17 வயதுடைய சிறுவர், சிறுமிகள் சினோபார்ம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Next Story