ஒலிம்பிக் போட்டி நடைபெறும் டோக்கியோ நகரில் மர்ம நபர் தாக்குதல்;மாணவி உள்பட 10 பேர் காயம்
ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வரும் டோக்கியோ நகரில் ரெயிலில் பயணித்த மர்ம நபர் கத்தியால் தாக்கியதில் 10 பேர் காயமடைந்தனர்.
டோக்கியோ
ஜாப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் 2020ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த விளையாட்டு போட்டி நாளையுடன் நிறைவடைகிறது. ஒலிம்பிக் போட்டி காரணமாக டோக்கியோ நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், நேற்று இரவு டோக்கியோ ஓடக்யூ ரெயில் நிலையத்தில் பயணிகள் ரெயிலில் பயணித்த நபர் ஒருவர், சக பயணிகளை கத்தியால் தாக்க தொடங்கியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் கத்தி கூச்சலிட்டு ஓடி உள்ளனர். இதையடுத்து ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 10 பேர் காயமடைந்துள்ளனர். பல்கலைக்கழக மாணவி ஒருவர் கடுமையான காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். அந்த மாணவியின் முதுகு மற்றும் மார்பில் பல இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டன.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய 36 வயது நபரை போலீசார் கைது செயது உள்ளனர். அவரது பெயர் யூசுக்கே சுஷிமா இவர் கனகாவா பிராந்தியத்தின் கவாசாகி பகுதியைச் சேர்ந்தவர். அவரிடம் நடத்திய விசாரணையில், ரெயிலில் சிரித்தப்படி மகிழ்ச்சியாக இருந்த பெண்களை பார்த்ததும் அவர்களை கொல்ல வேண்டும் என்று தோன்றியதாக கூறியுள்ளார். மேலும், மகிழ்ச்சியாக பெண்களை பார்த்தால் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் கடந்த 6 ஆண்டுகளாக இருந்து வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
உலகின் பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாக கருதப்படும் ஜப்பானில் கடந்த சில ஆண்டுகளாகவே கத்தி மூலம் தாக்குதல் நடத்துவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
Related Tags :
Next Story