எந்த நாட்டுடனும் இணைந்து பணியாற்ற அமெரிக்கா தயார் - ஜோ பைடன் அறிவிப்பு


எந்த நாட்டுடனும் இணைந்து பணியாற்ற அமெரிக்கா தயார் - ஜோ பைடன் அறிவிப்பு
x
தினத்தந்தி 21 Sep 2021 3:19 PM GMT (Updated: 21 Sep 2021 3:19 PM GMT)

அமைதியை பின்பற்றும் எந்த நாட்டுடனும் இணைந்து பணியாற்ற அமெரிக்கா தயாராக உள்ளதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

நியூயார்க்,

ஐ.நா. பொதுசபையின் 76-வது கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் பல்வேறு நாடுகளில் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த பொதுசபையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பங்கேற்று உரையாற்றினார்.

ஐ.நா. பொதுசபையில் ஜோ பைடன் பேசியதாவது,

நமது பாதுகாப்பு, வளர்ச்சி, சுதந்திரம் ஆகியவை ஒன்றோடு ஒன்று இணைந்தவை. இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் நாம் இணைந்து செயல்பட வேண்டும்.

நாம் இன்று பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறோம். ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகால பிரச்சினையை நாம் முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம். இந்த போரை முடிவுக்கு கொண்டுவந்துள்ள நாம் அங்கு வெளியுறவுக்கொள்கை என்ற கதவுகளை திறந்துள்ளோம். எத்தனை சவால்களை நாங்கள் சந்தித்த போதும் அமெரிக்கா சிறப்பானவற்றை வெளிப்படுத்தும். 

ஆயுதங்கள் கொரோனா வைரசை வீழ்த்தாது. ஒருங்கிணைந்த அறிவியல் மற்றும் அரசியல் சக்திகளால் கொரோனாவை வீழ்த்தலாம். நாம் இப்போதே செயல்பட வேண்டும். சிகிச்சைக்கான வசதிகளை விரிவுபடுத்தி உலகில் உள்ள உயிர்களை காக்க வேண்டும். எதிர்காலத்தில் உலக சுகாதார பாதுகாப்புக்கான நிதிக்காக புதிய நடைமுறைகளை நாம் உருவாக்க வேண்டும். 

அமெரிக்க ராணுவ சக்தி என்பது எங்கள் முதல் ஆயுதமல்ல... கடைசி ஆயுதம் ஆகும். பிளவுபட்ட உலகில் மீண்டும் ஒரு புதிய பனிப்போரை உருவாக்க நாங்கள் முயற்சிக்கவில்லை. அமைதியை பின்பற்றும் எந்த நாட்டுடனும் இணைந்து பணியாற்ற அமெரிக்கா தயாராக உள்ளது. நமது தோல்விகளால் நாம் அனைவரும் விளைவுகளை சந்தித்துள்ளோம். 

20 ஆண்டுகளுக்கு முன்னர் 9/11 தாக்குதல் நடந்தபோது இருந்த அதே அமெரிக்கா தற்போது இல்லை. இன்று நாம் சிறந்த ஆயுதங்கள் மற்றும் அதிக திறனுடன் உள்ளோம். எதிர் பிரசாரங்களை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்’ என்றார்.    

Next Story