ஒரே வாரத்தில் இரண்டாவது முறை முடங்கியது ; மன்னிப்பு கோரிய பேஸ்புக்


image courtesy: Getty Images
x
image courtesy: Getty Images
தினத்தந்தி 9 Oct 2021 5:45 AM GMT (Updated: 9 Oct 2021 5:45 AM GMT)

பேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவை இந்த வாரத்தில் மீண்டும் முடங்கியதால் பேஸ்புக் நிர்வாகம் பயனர்களிடம் மன்னிப்புக் கோரியது.

வாஷிங்டன்:

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவைகளில் மீண்டும் கோளாறு ஏற்பட்டது. உலகம் முழுக்க இரு சேவைகளை பயன்படுத்த முடியவில்லை என பயனர்கள் தெரிவித்தனர். சில மணி நேரங்கள் இடையூறு ஏற்பட்டதை தொடர்ந்து சேவைகள் சரி செய்யப்பட்டன.

பேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவை இந்த வாரத்தில் மீண்டும் முடங்கியதால் பேஸ்புக் நிர்வாகம் பயனர்களிடம் மன்னிப்புக் கோரியது.

வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை பிரபல சமூக ஊடகமான பேஸ்புக்  நிர்வகித்து வருகிறது.  கடந்த திங்களன்று இவற்றி சேவை பாதிக்கப்பட்டது. சுமார் 6 மணி நேரத்துக்கு மேலாக அவற்றை பயன்படுத்த முடியாமல் பயனர்கள் சிரமப்பட்டனர். பல மணிநேர போராட்டத்திற்கு பின்னர் கோளாறு செய்யப்பட்டது.

இந்த சேவை முடக்கத்தால் ரூ.52 ஆயிரம் கோடி வரை பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்கிற்கு இழப்பு ஏற்பட்டது.  சேவை முடக்கம் தொடர்பாக பயனர்களிடமும் மார்க் சக்கர்பெர்க் மன்னிப்புக் கோரினார்.

இந்நிலையில், சர்வதேச அளவில் ஒருசில பகுதிகளில் வாட்ஸ் அப் (whatsapp), பேஸ்புக்(facebook), இன்ஸ்டாகிராம்  (instagram)ஆகியவற்றின் சேவை மீண்டும் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  சில மணி நேரங்களுக்கு பின்னர் இந்த பாதிப்பு சரி செய்யப்பட்டது.

இந்திய நேரப்படி நேற்று (அக்டோபர் 8) நள்ளிரவு 11.50 மணி முதல் அக்டோபர் 9 அதிகாலை 2.20 மணி வரை சேவைகள் முடங்கியதாக தனியார் வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நேரத்தில் இன்ஸ்டாகிராம் செயலியின் அம்சங்கள் சீராக இயங்கவில்லை.  

இரு சேவைகள் முடங்கியதை அடுத்து பயனர்கள் டுவிட்டரில் இன்ஸ்டாகிராம் டவுன் எனும் ஹேஷ்டேக் மூலம் சேவைகள் முடங்கியதாக குற்றம்சாட்டினர். இதனால் #instagramdown மற்றும் #instadown எனும் ஹேஷ்டேக் டுவிட்டரில் வைரலானது. 

பின் பேஸ்புக், 'எங்களின் சேவைகளை பயன்படுத்த முடியவில்லை என பயனர்கள் தெரிவித்து வருகின்றனர். இதனை சரிசெய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்,' என தெரிவித்தது.

கட்டமைப்பில் செய்யப்பட்ட மாற்றம் (configuration change) காரணமாக ஒருசில பயனர்களுக்கு சேவைபாதிப்பு ஏற்பட்டதாக பேஸ்புக் நிர்வாகம்தெரிவித்துள்ளது.  கடந்த முறை ஏற்பட்ட சேவை பாதிப்பும் இதுவும் ஒன்றல்ல என்றும் விளக்கமளித்துள்ளது. 

கடந்த இரண்டு மணி நேரத்தில் எங்கள் தயாரிப்புகளை உங்களால் அணுக முடியவில்லை என்பது தொடர்பாக நாங்கள் வருந்துகிறோம்.  ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள நீங்கள் எங்களை எவ்வளவு சார்ந்துள்ளீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். சிக்கலை சரி செய்துவிட்டோம்- இந்த வாரம் உங்கள் பொறுமைக்கு மீண்டும் நன்றி” என்று பேஸ்புக் தெரிவித்துள்ளது. 

Next Story