நியூசிலாந்துக்குள் நுழைய விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!


நியூசிலாந்துக்குள் நுழைய விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!
x
தினத்தந்தி 24 Nov 2021 6:37 AM GMT (Updated: 24 Nov 2021 6:37 AM GMT)

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட வெளிநாட்டு பயணிகள் நியூசிலாந்துக்குள் நுழையலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வெலிங்டன்,

இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட வெளிநாட்டு பயணிகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 30ம் தேதி முதல் நியூசிலாந்துக்குள்  நுழையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த அறிவிப்பின் மூலம், மேலும் ஐந்து மாதங்களுக்கு வெளிநாட்டினர் தங்கள் நாட்டுக்குள் நுழைய முடியாது என்பதை நியூசிலாந்து அரசு தெளிவுபடுத்தி உள்ளது.  

கொரோனா பெருந்தொற்றின் காரணமாக நியூசிலாந்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதை கருத்தில் கொண்டு, மேற்கண்ட அறிவிப்பை அந்நாட்டு அரசாங்கம் வெளியிட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக அந்நாட்டின் முக்கிய நகரமான ஆக்லாந்தில் தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.

ஆஸ்திரேலியாவில் வசித்து வரும்  நியூசிலாந்து நாட்டினர் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டிருந்தால் அடுத்த ஆண்டு ஜனவரி 16ம் தேதி முதல் நியூசிலாந்துக்குள் நுழையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதைப்போல நியூசிலாந்து நாட்டின் குடியுரிமை விசா பெற்று அண்டை நாடான ஆஸ்திரேலியாவில் இருப்போரும் அடுத்த ஆண்டு ஜனவரி 16ம் தேதி முதல் நியூசிலாந்துக்குள் நுழையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருக்கும் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட நியூசிலாந்து நாட்டினரும்,  நியூசிலாந்து நாட்டின் குடியுரிமை விசா பெற்று பிற நாடுகளில் இருப்போரும் அடுத்த ஆண்டு பிப்ரவரி 13ம் தேதி முதல் நியூசிலாந்துக்குள் நுழையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்துக்குள் நுழைவோர் கொரோனா கால தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கொரொனா பரிசோதனை கண்டிப்பாக செய்யப்படும், பயணிகள் தாங்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட சான்றிதழை கட்டாயம் காண்பிக்க வேண்டும் என்பன போன்ற நடைமுறைகள் தொடரும்  என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story