துபாய்: வீட்டின் பால்கனியை தவறாக பயன்படுத்தினால் அபராதம்


துபாய்: வீட்டின் பால்கனியை தவறாக பயன்படுத்தினால் அபராதம்
x
தினத்தந்தி 28 Dec 2021 3:40 AM GMT (Updated: 28 Dec 2021 3:40 AM GMT)

பால்கனியில் துணியை காயப்போடுதல் கூடாது, பறவைகளுக்கு உணவளிக்க கூடாது, தொலைக்காட்சி ஆண்டெனா மற்றும் டிஷ்களை மாட்டக்கூடாது.

துபாய்,

துபாய் நகரில் இருக்கும் குடியிருப்புகளில் உள்ள பால்கனிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து துபாய் நகராட்சி ஆலோசனை வழங்கியுள்ளது.

துபாயில் வசிப்பவர்கள் நகரம் முழுவதும் அழகியல் தோற்றத்தை பராமரிக்க வேண்டும் மற்றும் தங்கள் அடுக்குமாடி பால்கனிகளை தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று துபாய் நகராட்சியால் பகிரப்பட்ட செய்தியில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

குடியிருப்புவாசிகள் தங்கள் பால்கனிகளை தவறாகப் பயன்படுத்தி அதன்மூலம் சமூகப் பிரச்சினை ஏற்பட வாய்ப்பளிக்க கூடாது. பிறருடைய கண்களை உறுத்தும் விதத்தில் பால்கனிகள் அமையக்கூடாது. இதனை உறுதிசெய்ய அவர்கள் தவிர்க்க வேண்டிய நடைமுறைகளைப் பற்றி நகராட்சி குடியிருப்பாளர்களுக்குத் தெரிவித்தது.

நிலையான சுற்றுச்சூழலுக்கான தேவைகள் மற்றும் தரநிலைகள் குறித்து சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நகரத்தின் பொதுவான அழகியல் மற்றும் நாகரீக தோற்றத்தை சிதைப்பதைத் தவிர்க்குமாறு அனைத்து ஐக்கிய அரபு எமிரேட் குடியிருப்பாளர்களை துபாய் நகராட்சி சார்பில் டுவிட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பால்கனியில் செய்யக்கூடாதவை:-

1.துணியை காயப்போடுதல் கூடாது

2. சிகரெட் துகள்களை பால்கனியில் இருந்து வெளியே வீசக் கூடாது

3.பால்கனியில் இருந்து குப்பைகளை வீசக் கூடாது

4.பால்கனியை கழுவும்போது அந்த அழுக்கு தண்ணீர் வெளியே வர கூடாது 

5.பறவைகளுக்கு பால்கனியில் உணவளிக்க கூடாது

6.பால்கனியில் தொலைக்காட்சி ஆண்டெனா மற்றும் டிஷ்களை மாட்டக்கூடாது

பால்கனிகளை தவறாகப் பயன்படுத்தினால்  500 முதல் 1,500 திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story