வாரத்தில் இனி 4 நாட்கள் மட்டுமே வேலை: நாளை முதல் சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்த ஜெர்மனி திட்டம்


வாரத்தில் இனி 4 நாட்கள் மட்டுமே வேலை:  நாளை முதல் சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்த ஜெர்மனி திட்டம்
x
தினத்தந்தி 31 Jan 2024 4:40 AM GMT (Updated: 31 Jan 2024 5:01 AM GMT)

உலகில் பல வளர்ந்த நாடுகள் குறைவான வேலை நேரத்தைக்கடைபிடிக்கின்றன.

பெர்லின்,

ஜெர்மனி பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள புதிய சோதனை முயற்சியை மேற்கொள்ளவிருக்கிறது. உலகில் வளர்ந்த நாடுகளான டென்மார்க், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், ஸ்பெயின், இங்கிலாந்து, ஜப்பான் போன்ற நாடுகள் குறைவான வேலை நேரத்தைக் கடைபிடித்து வருகின்றன. இந்த நிலையில் ஜெர்மனியும் குறைவான வேலை நேரத்தைக் கடைபிடிக்க உள்ளது.

அதன்படி நாளை முதல், வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை என்ற திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவர உள்ளது. மீதமுள்ள 3 நாட்கள் விடுமுறை தானாம். இதனை கடைபிடிப்பதன் மூலம் பணியாளர்களின் உடல் மற்றும் மனநிலை ஆரோக்கியமடைவதோடு அவர்களது செயல்திறனும் அதிகரிக்கும் என ஜெர்மனி அரசு எதிர்பார்க்கிறது.

இந்த திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என அந்நாட்டில் உள்ள பல தொழிலாளர் சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தன. இந்த நிலையில் அமலுக்கு வரவிருக்கும் இந்த சோதனை நல்ல பலனை அளிக்கும் என தொழிற்சங்கங்களும் அரசும் எதிர்பார்க்கின்றன. இதில் ஜெர்மனியின் 45 நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இந்த சோதனை அடுத்த 6 மாதங்களுக்கு மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் ஜெர்மனியில் நிலவும் குறைந்த பணியாளர்கள் பிரச்சினையும் தீர்வுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெல்ஜியத்தில் வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே மக்கள் வேலை செய்கிறார்கள். அதாவது, வாரத்தில் 40 மணிநேரம் வேலை. நெதர்லாந்தில் வாரத்திற்கு 29 மணிநேரம் மட்டுமே மக்கள் வேலை செய்கிறார்கள். வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே அவர்களுக்கு வேலை. இந்த நடைமுறைகள் நல்ல பலன்களை அளிப்பதாக அந்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.


Next Story