துருக்கி அதிபர் தேர்தலில் வெற்றி: மீண்டும் ஆட்சியை கைப்பற்றினார் எர்டோகன்..!!


துருக்கி அதிபர் தேர்தலில் வெற்றி: மீண்டும் ஆட்சியை கைப்பற்றினார் எர்டோகன்..!!
x
தினத்தந்தி 28 May 2023 8:27 PM GMT (Updated: 28 May 2023 8:27 PM GMT)

துருக்கி அதிபர் தேர்தலில் எர்டோகன் வெற்றி பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

அங்காரா,

துருக்கியில் 2003-ம் ஆண்டு முதல் பிரதமராக இருந்த தாயீப் எர்டோகன் 2014-ல் அந்தபதவியை கலைத்து விட்டு அதிபராக பதவி ஏற்றார். அதுமுதல் அவர் சர்வாதிகாரி போல செயல்படுவதாக அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.

கடந்த 20 ஆண்டுகளாக எர்டோகன் ஆட்சி செய்து வரும் நிலையில் தற்போது அங்கு அதிபர் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதன் முதல்கட்டமாக கடந்த 15-ந் தேதி அங்கு தேர்தல் நடந்தது. இதில் எர்டோகன் 49.50 சதவீதம் வாக்குகளும், கூட்டணி கட்சி வேட்பாளர் கெமால் கிளிக்டரோக்லு 44.79 சதவீத வாக்குகளும் பெற்றனர். இரு தரப்பினரும் பெரும்பான்மை பெறாததால் 2-வது சுற்று தேர்தல் நேற்று நடைபெற்றது.

இதில் நேற்று காலை முதலே பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்தில் வாக்களித்தனர். அங்கு நீண்ட கால ஆட்சி புரிந்தவர் என்ற நிலையில் எர்டோகன் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுகிறாரா? அல்லது ஆட்சி மாற்றம் நடைபெறுமா? என்று பொதுமக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் துருக்கி அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதாக தாயீப் எர்டோகன் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏறக்குறைய அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்ட நிலையில், நேற்று நடந்த இரண்டாவது சுற்றில் எர்டோகன் 52.2 சதவீத வாக்குகளைப் பெற்றார், அவருக்கு எதிராக போட்டியிட்ட கெமல் கிலிக்டரோக்லுவை 47.8 சதவீத வித்தியாசத்தில் வென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன் உறுதியான முடிவு வரும் நாட்களில் உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனது 20 ஆண்டுகால ஆட்சியை மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டித்துள்ள எர்டோகனின் இந்த வெற்றி வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.

அவர் ஏற்கனவே துருக்கி குடியரசின் நிறுவனர் முஸ்தபா கெமால் அட்டதுர்க்கின் 15 ஆண்டு ஜனாதிபதி பதவி சாதனையை முறியடித்துள்ளார்.


Next Story