ஷோரி சதத்தால் சரிவில் இருந்து மீண்டது டெல்லி


ஷோரி சதத்தால் சரிவில் இருந்து மீண்டது டெல்லி
x
தினத்தந்தி 29 Dec 2017 11:00 PM GMT (Updated: 29 Dec 2017 9:58 PM GMT)

விதர்பாவுக்கு எதிரான ரஞ்சி இறுதி ஆட்டம்: ஷோரி சதத்தால் சரிவில் இருந்து மீண்டது டெல்லி அணி.

இந்தூர்,

ரஞ்சி கிரிக்கெட்டில் டெல்லி - விதர்பா அணிகள் இடையிலான இறுதிப்போட்டி இந்தூரில் நேற்று தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்த விதர்பா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி பேட்டிங்கை தொடங்கிய முன்னாள் சாம்பியனான டெல்லி அணிக்கு திருப்திகரமான தொடக்கம் கிடைக்கவில்லை. 99 ரன்களை எட்டுவதற்குள் குணால் சண்டிலா (0), கவுதம் கம்பீர் (15 ரன்), நிதிஷ் ராணா (21 ரன்), கேப்டன் ரிஷாப் பான்ட் (21 ரன்) ஆகிய முன்னணி வீரர்கள் வெளியேற்றப்பட்டனர்.

நெருக்கடியான சூழலில் கைகோர்த்த துருவ் ஷோரியும், ஹிமாத் சிங்கும் பொறுப்பாக விளையாடி அணியை வீழ்ச்சியில் இருந்து மீட்டெடுத்தனர். இவர்கள் 5-வது விக்கெட்டுக்கு 105 ரன்கள் திரட்டினர். ஹிமாத் சிங் 66 ரன்களில் (72 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்) விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனார். மறுமுனையில் அபாரமாக ஆடிய துருவ் ஷோரி தனது 3-வது முதல்தர போட்டி சதத்தை நிறைவு செய்தார். 6-வது விக்கெட்டுக்கு இறங்கிய மனன் ஷர்மா 13 ரன்னில் நடையை கட்டினார்.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் டெல்லி அணி முதல் இன்னிங்சில் 90 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 271 ரன்கள் எடுத்துள்ளது. துருவ் ஷோரி 123 ரன்களுடன் (256 பந்து, 17 பவுண்டரி) களத்தில் உள்ளார். விதர்பா தரப்பில் குர்பானி, ஆதித்ய தாக்ரே தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெறும்.

Next Story