தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்திய அணிக்கு 287 ரன்கள் இலக்கு


தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்திய அணிக்கு 287 ரன்கள் இலக்கு
x
தினத்தந்தி 16 Jan 2018 10:00 PM GMT (Updated: 16 Jan 2018 8:44 PM GMT)

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு 287 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

செஞ்சூரியன்,

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு 287 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

2-வது டெஸ்ட் கிரிக்கெட்

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. கேப்டவுனில் நடந்த முதலாவது டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் முறையே தென்ஆப்பிரிக்க அணி 335 ரன்னும், இந்திய அணி 307 ரன்னும் எடுத்தன.

டிவில்லியர்ஸ் 80 ரன்கள்


28 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர் மார்க்ராம் 1 ரன்னிலும், ஹசிம் அம்லா 1 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். மழை மற்றும் போதிய வெளிச்சம் இல்லாததால் பாதிக்கப்பட்ட 3-வது நாள் ஆட்டம் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 29 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்து இருந்தது. டீன் எல்கர் 36 ரன்னுடனும், டிவில்லியர்ஸ் 50 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. டீன் எல்கர், டிவில்லியர்ஸ் தொடர்ந்து ஆடினார்கள். அணியை ஆரம்ப கட்ட சரிவில் இருந்து மீட்ட இருவரும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அணியின் ஸ்கோர் 144 ரன்னாக உயர்ந்த போது இந்த ஜோடி பிரிந்தது. டிவில்லியர்ஸ் (80 ரன்கள், 121 பந்துகளில் 10 பவுண்டரியுடன்) முகமது ஷமி பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் பார்த்தீவ் பட்டேலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 3-வது விக்கெட்டுக்கு டீன் எல்கர்-டிவில்லியர்ஸ் ஜோடி 141 ரன்கள் சேர்த்தது.

டீன் எல்கர் 61 ரன்

அடுத்து கேப்டன் டுபிளிஸ்சிஸ், டீன் எல்கருடன் இணைந்தார். நிலைத்து நின்று ஆடிய டீன் எல்கர், முகமது ஷமி பந்து வீச்சில் லோகேஷ் ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அவர் 121 பந்துகளில் 8 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 61 ரன்கள் எடுத்தார். அடுத்து குயின்டான் டி காக் 12 ரன்னில் ஆட்டம் இழந்தார். 19 ரன்களுக்குள் முகமது ஷமி 3 முக்கிய விக்கெட்டுகளை சாய்த்தார். இந்திய வேகப்பந்து வீச்சில் தென்ஆப்பிரிக்க விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன. பிலாண்டர் 26 ரன்னிலும், மகராஜ் 6 ரன்னிலும், ரபடா 4 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

ஒரு புறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் பொறுப்புடன் நிலைத்து நின்று ஆடிய கேப்டன் டுபிளிஸ்சிஸ் அணியின் ஸ்கோரை தொடர்ந்து உயர்த்தினார். நிதானமாக ஆடிய டுபிளிஸ்சிஸ் 141 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 48 ரன்கள் எடுத்த நிலையில் ஜஸ்பிரித் பும்ரா பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். கடைசி விக்கெட்டாக நிகிடி 1 ரன்னில் அஸ்வின் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார்.

287 ரன்கள் இலக்கு

தேனீர் இடைவேளைக்கு பிறகு தென்ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்சில் 91.3 ஓவர்களில் 258 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. மோர்னே மோர்கல் 10 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 4 விக்கெட்டும், ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டும், இஷாந்த் ஷர்மா 2 விக்கெட்டும், அஸ்வின் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். இந்திய அணிக்கு 287 ரன்களை வெற்றி இலக்காக தென்ஆப்பிரிக்க நிர்ணயித்தது.

இந்திய அணி திணறல்

பின்னர் 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. எம்.விஜய் 9 ரன்னிலும், லோகேஷ் ராகுல் 4 ரன்னிலும், கேப்டன் விராட்கோலி 5 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் இந்திய அணி 2-வது இன்னிங்சில் 23 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் எடுத்து திணறியது. இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. இந்திய அணி வெற்றிக்கு மேலும் 252 ரன்கள் தேவைப்படுகிறது. கைவசம் 7 விக்கெட்டுகள் இருக்கிறது.

Next Story