ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ‘ஒவ்வொரு இன்னிங்சிலும் 2 புதிய பந்துகளை பயன்படுத்துவது பேரழிவுக்கு வழிவகுக்கும்’


ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ‘ஒவ்வொரு இன்னிங்சிலும் 2 புதிய பந்துகளை பயன்படுத்துவது பேரழிவுக்கு வழிவகுக்கும்’
x
தினத்தந்தி 22 Jun 2018 9:30 PM GMT (Updated: 22 Jun 2018 8:18 PM GMT)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3–வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 481 ரன்கள் குவித்து புதிய உலக சாதனை படைத்தது.

புதுடெல்லி, 

சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3–வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 481 ரன்கள் குவித்து புதிய உலக சாதனை படைத்தது. இந்த போட்டியில் பந்து வீச்சாளர்களால் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. 2011–ம் ஆண்டு முதல் ஒருநாள் போட்டியில் ஒவ்வொரு இன்னிங்சிலும் 2 புதிய பந்துகளை பயன்படுத்தலாம் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) விதிமுறையில் திருத்தம் செய்தது. இதனால் தற்போது ஒருநாள் போட்டியில் 400 ரன்கள் குவிப்பது என்பது எளிதாகி விட்டது.

ஒருநாள் போட்டியில் செய்யப்பட்ட இந்த விதிமுறை மாற்றத்துக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் தெண்டுல்கர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து தெண்டுல்கர் தனது டுவிட்டர் பதிவில், ‘ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஒவ்வொரு இன்னிங்சிலும் 2 புதிய பந்துகளை பயன்படுத்துவது ஆட்டத்தை பேரழிவுக்கு கொண்டு செல்வதற்குரிய சரியான அறிகுறியாகும். ஒவ்வொரு பந்தும் தேய்ந்து பந்து வீச்சாளர்கள் ஸ்விங் செய்வதற்கும், சுழல விடுவதற்கும் அதிக நேரம் பிடிக்கும். இதனால் ரிவர்ஸ் ஸ்விங்கையும், ரன்களை விட்டுக்கொடுக்காத கடைசி கட்ட ஓவர்களையும் நம்மால் நீண்ட காலமாக பார்க்க முடியவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

தெண்டுல்கரின் கருத்தை பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸ், இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி ஆகியோரும் வரவேற்றுள்ளர். இது பற்றி விராட்கோலி கருத்து தெரிவிக்கையில், ‘புதிய விதிமுறை பந்து வீச்சாளர்களுக்கு பாதகத்தை அதிகரிப்பதாகும். நான் ஒருநாள் போட்டியில் விளையாட வருகையில் ஒரு புதிய பந்து தான் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது. இதனால் இன்னிங்சின் பின் பாதியில் ரிவர்ஸ் ஸ்விங் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அது பேட்ஸ்மேன்களுக்கு அதிக சவாலாக இருந்தது’ என்றார்.


Next Story