6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம் முதல் ஆட்டத்தில் இலங்கை–வங்காளதேசம் மோதல்


6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம் முதல் ஆட்டத்தில் இலங்கை–வங்காளதேசம் மோதல்
x
தினத்தந்தி 14 Sep 2018 10:30 PM GMT (Updated: 14 Sep 2018 8:22 PM GMT)

இந்தியா, பாகிஸ்தான் உள்பட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் இன்று தொடங்குகிறது.

துபாய், 

இந்தியா, பாகிஸ்தான் உள்பட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் இன்று தொடங்குகிறது.

ஆசிய கிரிக்கெட்

கிரிக்கெட்டில் ஆசிய கண்டத்தின் ஜாம்பவான் யார்? என்பதை அடையாளம் காணவும், ஆசிய நாடுகள் இடையே நல்லுறவை வளர்க்கவும் ஆசிய கோப்பை போட்டி அறிமுகம் செய்யப்பட்டது.

முதலாவது ஆசிய கிரிக்கெட் போட்டி 1984–ம் ஆண்டு சார்ஜாவில் அரங்கேறியது. அதில் இந்தியா மகுடம் சூடியது. அதன் பிறகு இந்த போட்டி 2 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. தவிர்க்க முடியாத காரணங்களால் இடையே சில ஆண்டுகள் நடத்தப்படவில்லை. இலங்கை கிரிக்கெட் வாரியத்துடனான மோதல் போக்கு எதிரொலியாக 1986–ம் ஆண்டு போட்டியை இந்தியாவும், இந்தியாவுடனான பதற்றமான சூழல் காரணமாக 1990–91–ம் ஆண்டு போட்டியை பாகிஸ்தானும் புறக்கணித்தன.

2016–ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடந்ததால் அதற்கு தயாராகும் பொருட்டு அந்த ஆண்டு மட்டும் ஆசிய கோப்பை போட்டி 20 ஓவர் வடிவில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதுவரை நடந்துள்ள ஆசிய போட்டிகளில் அதிகபட்சமாக இந்தியா 6 முறையும், இலங்கை 5 முறையும் பட்டம் வென்றுள்ளன.

இன்று தொடக்கம்

இந்த நிலையில் 14–வது ஆசிய கோப்பை கிரிக்கெட் திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. வருகிற 28–ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டியில் 6 அணிகள் பங்கேற்கின்றன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்–4 சுற்றுக்கு முன்னேறும்.

சூப்பர்–4 சுற்றை எட்டும் 4 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். அதில் இருந்து டாப்–2 அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழையும்.

ரோகித் சர்மா தலைமையில்...

கடினமான இங்கிலாந்து தொடரில் இடைவிடாது ஆடிய இந்திய கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக ரோகித் சர்மா, ஆசிய போட்டியில் இந்திய அணியை வழிநடத்துகிறார்.

ஒரு நாள் கிரிக்கெட்டில் மூன்று இரட்டை சதம் விளாசிய ஒரே வீரரான ரோகித் சர்மா மற்றும் டோனி, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், அம்பத்தி ராயுடு, மனிஷ் பாண்டே, ஹர்திக் பாண்ட்யா போன்ற தரமான பேட்ஸ்மேன்களுடன், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர்குமார் ஆகிய சிறந்த பவுலர்களும் அங்கம் வகிப்பதால் இந்திய அணி வலுவாகவே காணப்படுகிறது.

தனது முதல் லீக்கில் கத்துக்குட்டி அணியான ஹாங்காங்குடன் (18–ந்தேதி) மோதும் இந்திய அணி ஓய்வின்றி மறுநாளே (19–ந்தேதி) பரம எதிரியான பாகிஸ்தானை சந்திக்கிறது. அது மட்டுமின்றி சூப்பர்–4 சுற்றிலும் பாகிஸ்தானை மீண்டும் சந்திக்க வேண்டி இருக்கும் என்பதால் இந்த முறை ரசிகர்களுக்கு ‘இரட்டை விருந்து’ காத்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

பாகிஸ்தான் எப்படி?

விக்கெட் கீப்பர் சர்ப்ராஸ் அகமது தலைமையில் களம் காணும் பாகிஸ்தான் அணியில் முகமது அமிர், ஹசன் அலி, பஹார் ஜமான், பாபர் அசாம், ஹாரிஸ் சோகைல் உள்ளிட்டோர் சூப்பர் பார்மில் உள்ளனர். அத்துடன் ஐக்கிய அரபு அமீரகம் அவர்களுக்கு உள்ளூர் போன்றது. கடந்த 8 ஆண்டுகளாக அந்த அணி தங்களது உள்நாட்டு போட்டிகளை இங்கு தான் விளையாடி வருகிறது. இதனால் இங்குள்ள சீதோஷ்ண நிலை பாகிஸ்தான் அணிக்கு அத்துபிடியாகும். இது பாகிஸ்தானுக்கு அனுகூலமான வி‌ஷயமாகும்.

இதே போல் முன்னாள் சாம்பியன் மேத்யூஸ் தலைமையிலான இலங்கை, மோர்தசா தலைமையிலான வங்காளதேசம் ஆகிய அணிகளும் கோப்பையை உச்சிமுகர வேண்டும் என்பதில் தீவிரம் கட்டுவதால் ஆசிய கோப்பை போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல் ஆட்டம்

தொடக்க நாளான இன்று முதல் லீக்கில் இலங்கை–வங்காளதேச அணிகள் துபாயில் பலப்பரீட்சை நடத்துகின்றன. இலங்கை அணியில் காயம் காரணமாக சன்டிமால் விலகியுள்ளார். நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் மனைவியை அருகில் இருந்து கவனித்து வரும் ‘சுழல் புயல்’ அகிலா தனஞ்ஜெயா முதல் இரு ஆட்டங்களில் ஆடமாட்டார் என்று தெரிகிறது. இது வங்காளதேசத்துக்கு சற்று சாதகமான அம்சமாகும். அதே சமயம், மூத்த வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா ஓராண்டு இடைவெளிக்கு பிறகு இலங்கை அணிக்கு திரும்பியிருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

வங்காளதேச அணியில் தமிம் இக்பால், ‌ஷகிப் அல்–ஹசன், முஷ்பிகுர் ரஹிம், மக்முதுல்லா ஆகியோர் பேட்டிங்கில் மிரட்டுவார்கள் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

இவ்விரு அணிகளும் இதுவரை 44 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் 36–ல் இலங்கையும், 6–ல் வங்காளதேசமும் வெற்றி பெற்றன. 2 ஆட்டத்தில் முடிவில்லை.

மைதான கண்ணோட்டம்

துபாயில் தற்போது வெயில் காலமாகும். அனைத்து ஆட்டங்களும் பகல்–இரவு மோதல் என்பதால் முதலில் பேட் செய்யும் அணியை வெயில் வாட்டும். மின்னொளியின் கீழ் 2–வது பேட் செய்யும் போது, இரவில் அனலின் தாக்கத்தால் வியர்த்து கொட்டும். இந்த சீதோஷ்ண நிலையை திறம்பட சமாளிக்கும் அணிக்கு வெற்றிக்கனி கிட்டும். பொதுவாக இங்குள்ள ஆடுகளம் மெதுவான தன்மை கொண்டது என்பதால், ஆட்டத்தில் சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள்.

இந்த மைதானத்தில் இதுவரை 23 ஒரு நாள் போட்டிகள் நடந்துள்ளன. இதில் 2–வது பேட் செய்த அணியே 15 முறை வெற்றி பெற்றிருக்கிறது. 2015–ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுக்கு 355 ரன்கள் குவித்தது இங்கு ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோராகும். 2011–ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கை அணி 131 ரன்னில் சுருண்டது குறைந்தபட்சமாகும்.

மாலை 5 மணிக்கு...

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:–

இலங்கை: டிக்வெல்லா, தரங்கா, குசல் பெரேரா, குசல் மென்டிஸ், மேத்யூஸ் (கேப்டன்), தனஞ்ஜெயா டி சில்வா, திசரா பெரேரா, ‌ஷனகா, தில்ருவான் பெரேரா, லக்மல், மலிங்கா.

வங்காளதேசம்: தமிம் இக்பால், லிட்டான் தாஸ், ‌ஷகிப் அல்–ஹசன், முஷ்பிகுர் ரஹிம், மக்முதுல்லா, மோசடெக் ஹூசைன், முகமத் மிதுன், மோர்தசா (கேப்டன்), மெஹிதி ஹசன் மிராஸ், ருபெல் ஹூசைன், முஸ்தாபிஜூர் ரகுமான்.

இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1, 2, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் ஆகிய சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

‘பாகிஸ்தானுடன் மோதுவதற்கு ஆர்வம்’– ரோகித் சர்மா

ஆசிய போட்டிக்கான இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–

அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு சரியான கலவையில் அணி அமைவதற்குரிய ஒரு வாய்ப்பாக ஆசிய போட்டி இருக்கும். மற்ற அணிகளின் கேப்டன்களும் இதே எண்ண ஓட்டத்துடன் இருக்கிறார்களா? என்பது தெரியவில்லை. ஆனால் உலக கோப்பை போட்டிக்கு இன்னும் நீண்ட காலம் உள்ளது. அதற்கு முன்பாக நாங்கள் நிறைய போட்டிகளில் விளையாட உள்ளோம். அந்த போட்டிகள் வீரர்களுக்கு உலக கோப்பை போட்டிக்கான அணியில் இடம் பிடிப்பதற்குரிய வாய்ப்பை வழங்கும்.

சமீப காலமாக பாகிஸ்தான் சிறந்த கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறது. பாகிஸ்தானுடன் மோதும் ஆட்டத்தை ஆவலோடு எதிர்நோக்கி உள்ளோம். அதே நேரத்தில் குறிப்பிட்ட நாடு என்றில்லாமல், ஒட்டுமொத்த தொடர் மீதும் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு நாடும் கோப்பையை வெல்லும் முனைப்புடன் உள்ளன. முதல்தடவையாக, முழுமையான ஒரு தொடருக்கு கேப்டனாகி உள்ளேன். தனிப்பட்ட முறையில் அது எனக்கு மகிழ்ச்சியும், பரவசமும் அளிக்கிறது.

இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.


Next Story