ஐதராபாத் டெஸ்டில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி; தொடரை 2-0 எனக் கைப்பற்றியது


ஐதராபாத் டெஸ்டில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி; தொடரை 2-0 எனக் கைப்பற்றியது
x
தினத்தந்தி 14 Oct 2018 1:28 PM GMT (Updated: 14 Oct 2018 1:28 PM GMT)

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்ற இந்தியா தொடரை 2-0 என்ற கணக்கில் தனதாக்கியது.




இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. ராஜ்கோட்டில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை துவக்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி மிகவும் கவனமாக விளையாடியது. சீரான விளையாட்டை வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் வெளிப்படுத்தினர். 

101.4 ஓவர்கள் தாக்கு பிடித்த வெஸ்ட் இண்டீஸ் அணி 311 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 
இதையடுத்து, தனது முதல் இன்னிங்சை துவங்கிய இந்திய அணியும் அபாரம் காட்டியது. இந்தியா 367 ரன்களை சேர்த்தது. 56 ரன்கள் பின்தங்கிய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் 2-வது இன்னிங்சை தொடங்கியது. உமேஷ் யாதவ் (4), ஜடேஜா (3) ஆகியோரின் அபார பந்து வீச்சால் வெஸ்ட் இண்டீஸ் 127 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியாவை விட 71 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

இதனால் இந்தியாவிற்கு 72 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ். 72 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியாவின் லோகேஷ் ராகுல், பிரித்வி ஷா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பாக விளையாடினார்கள். குறிப்பாக முதல் இன்னிங்சில் ஏமாற்றம் அடைந்த லோகேஷ் ராகுல் பொறுப்புடன் விளையாடினார். இருவரும் ஆட்டமிழக்காமல் இலக்கை எட்ட உதவிகரமாக இருந்தனர். 17-வது ஓவரின் முதல் பந்தை பிரித்வி ஷா பவுண்டரிக்கு விரட்ட இந்தியா 75 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. லோகேஷ் ராகுல், பிரித்வி ஷா தலா 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

Next Story