ரமேஷ் பவாரின் குற்றச்சாட்டால் வேதனை: ‘எனது வாழ்க்கையின் கருப்பு நாள்’ மிதாலிராஜ் உருக்கம்


ரமேஷ் பவாரின் குற்றச்சாட்டால் வேதனை: ‘எனது வாழ்க்கையின் கருப்பு நாள்’ மிதாலிராஜ் உருக்கம்
x
தினத்தந்தி 29 Nov 2018 10:30 PM GMT (Updated: 29 Nov 2018 9:01 PM GMT)

ரமேஷ் பவாரின் குற்றச்சாட்டால் வேதனைக்குள்ளாகி இருக்கும் மிதாலிராஜ் இது எனது வாழ்க்கையின் கருப்பு நாள் என்று கூறியிருக்கிறார்.

புதுடெல்லி, 

சமீபத்தில் வெஸ்ட் இண்டீசில் நடந்த பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அரைஇறுதியில் படுதோல்வி அடைந்து வெளியேறியது. இங்கிலாந்துக்கு எதிரான முக்கியமான அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய அணியில் அனுபவ வீராங்கனை மிதாலி ராஜ் ஓரங்கட்டப்பட்டது சர்ச்சையை கிளப்பியது. பயிற்சியாளர் ரமேஷ் பவார் வேண்டுமென்றே தன்னை நீக்கியதாகவும், பலமுறை அவர் அவமதித்ததாகவும் 35 வயதான மிதாலிராஜ் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரிகளை சந்தித்து விளக்கம் அளித்த ரமேஷ் பவார், மிதாலியை நீக்கியது அணியின் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு என்று கூறினார். மேலும் ‘பயிற்சி ஆட்டங்களில் மிதாலி அதிரடியாக ரன்கள் எடுப்பதில் தடுமாறினார். அவரிடம் 20 ஓவர் கிரிக்கெட்டுக்குரிய உத்வேகமும் இல்லை’ என்பது போன்ற விஷயங்களை சுட்டிகாட்டி அறிக்கையை சமர்பித்தார்.

எல்லாவற்றுக்கும் மேலாக, ‘தொடக்க வீராங்கனையாக ஆட அனுமதிக்காவிட்டால் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விடுவேன் என்று மிதாலிராஜ் மிரட்டினார். அத்துடன் பயிற்சியாளருக்கு மிகுந்த நெருக்கடி கொடுக்கிறார். அணியின் நலனை பார்க்காமல் தனிப்பட்ட சாதனை மீதே அவரது நோக்கம் அதிகமாக உள்ளது. 50 ஓவர் போட்டி அணிக்கு கேப்டனாக இருக்கும் அவர் இத்தகைய போக்கை நிறுத்திக்கொள்ள வேண்டும்’ என்றும் பவார் அதில் குறிப்பிட்டு இருக்கிறார்.

ரமேஷ் பவாரின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளால் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கும் மிதாலிராஜ் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு வருமாறு:-

என்னை பற்றி தவறாக சித்தரித்து இருப்பதால் (பவாரின் கருத்து) மிகுந்த வேதனைக்குள்ளாகி இருக்கிறேன். கிரிக்கெட் மீதான எனது அர்ப்பணிப்பு உணர்வும், தேசத்திற்காக 20 ஆண்டுகள் வியர்வை சிந்தி கடினமாக உழைத்ததும் வீணாகி விட்டது. இன்று, என் தேசப்பற்றை சந்தேகிக்கின்றனர். எனது திறமை கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. என்னுடைய புகழை அழிக்க முயற்சிக்கிறார்கள். இது, எனது வாழ்க்கையின் கருப்பு நாள். காயப்பட்ட எனக்கு கடவுள் தான் மனவலிமையை கொடுக்க வேண்டும்.

இவ்வாறு மிதாலி அதில் கூறியுள்ளார்.

இதற்கிடையே மிதாலிராஜிக்கு ஆதரவு கரம் நீட்டியுள்ள இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் அளித்த ஒரு பேட்டியில், ‘மிதாலிக்காக நான் வருத்தப்படுகிறேன். இந்திய கிரிக்கெட்டுக்காக 20 ஆண்டு காலம் பங்களிப்பை அளித்துள்ளார். நிறைய ரன்கள் குவித்து இருக்கிறார். 20 ஓவர் உலக கோப்பையில் இரண்டு ஆட்டங்களில் அடுத்தடுத்து அரைசதம் விளாசி ஆட்டநாயகி விருதை பெற்றார். ஒரு ஆட்டத்தின் போது காயமடைந்த அவர் அடுத்த ஆட்டத்திற்குள் குணமடைந்து தயாராகி விட்டார். ஆனாலும் அரைஇறுதிப்போட்டியில் அவரை சேர்க்கவில்லை. இதே சூழலை அப்படியே ஆண்கள் கிரிக்கெட்டுக்கு கொண்டு வந்து பாருங்கள். விராட் கோலி ஒரு ஆட்டத்தில் காயமடைந்து, அடுத்து நாக்-அவுட் சுற்றுக்கு அவர் உடல்தகுதியுடன் இருக்கும் போது அவரை சேர்க்காமல் விட்டு விடுவார்களா?

எப்போதும் நாக்-அவுட் சுற்று ஆட்டங்களுக்கு சிறந்த ஆட்டக்காரர்களை தேர்வு செய்ய வேண்டும். இத்தகைய ஆட்டங்களில் மிதாலிராஜ் போன்ற வீராங்கனையின் அனுபவம் அவசியமாகும். எந்த காரணம் சொன்னாலும் மிதாலியை நீக்கியது தவறு தான்.’ என்றார்.

Next Story