மாநில பள்ளி கிரிக்கெட்: சாந்தோம் அணி அபாரம்


மாநில பள்ளி கிரிக்கெட்: சாந்தோம் அணி அபாரம்
x
தினத்தந்தி 22 Jan 2019 10:30 PM GMT (Updated: 22 Jan 2019 9:54 PM GMT)

மாநில பள்ளி கிரிக்கெட் போட்டியில், சாந்தோம் அணி வெற்றிபெற்றது.

நெல்லை,

பள்ளி அணிகளுக்கான மாநில அளவிலான ஜூனியர் சூப்பர் கிங்ஸ் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதி சுற்று நெல்லை சங்கர்நகரில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் முதல் ஆட்டத்தில் சென்னை சாந்தோம் அணியும், மதுரை லி சாட்லியர் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த சாந்தோம் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஆதிசங்கர் 59 ரன்களும், அஜய்சேட்டன் ஆட்டம் இழக்காமல் 39 ரன்களும் எடுத்தனர். பின்னர் ஆடிய லி சாட்லியர் அணி 18 ஓவர்களில் 101 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. இதனால் சாந்தோம் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மற்றொரு ஆட்டத்தில் சென்னை செயின்ட் பீட்ஸ் அணியும், திருப்பூர் பிளாட்டோஸ் அகாடமி அணியும் சந்தித்தன. இதில் டாஸ் ஜெயித்து முதலில் ஆடிய திருப்பூர் அணி 19.5 ஓவர்களில் 77 ரன்னில் சுருண்டது. விக்ரம் கமலேசுவரன் 4 விக்கெட்டும், நிகிலேஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த இலக்கை செயின்ட் பீட்ஸ் அணி 10.1 ஓவர்களில் எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி கண்டது.

Next Story