வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கு தயாராகுவதற்கு 7 இந்திய வீரர்கள் கவுண்டி கிரிக்கெட்டில் பங்கேற்பு


வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கு தயாராகுவதற்கு 7 இந்திய வீரர்கள் கவுண்டி கிரிக்கெட்டில் பங்கேற்பு
x
தினத்தந்தி 19 April 2019 10:00 PM GMT (Updated: 19 April 2019 8:26 PM GMT)

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில் இந்தியாவை சேர்ந்த 7 வீரர்கள் கவுண்டி கிரிக்கெட்டில் பங்கேற்க உள்ளனர்.

புதுடெல்லி, 

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில் இந்தியாவை சேர்ந்த 7 வீரர்கள் கவுண்டி கிரிக்கெட்டில் பங்கேற்க உள்ளனர்.

கவுண்டி போட்டியில் 7 வீரர்கள்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி முடிந்ததும் இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. ஜூலை மாத இறுதியில் இந்த தொடர் தொடங்குகிறது. இந்த தொடரில் இருந்து இதன் முடிவுகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இதையொட்டி உலக கோப்பை அணியில் இடம் பெறாத இந்திய முன்னணி வீரர்களை தயார்படுத்த அவர்களை இங்கிலாந்தின் கவுண்டி கிரிக்கெட் போட்டிக்கு அனுப்ப இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

இதன்படி புஜாரா, ரஹானே, பிரித்வி ஷா, ஹனுமா விஹாரி, மயங்க் அகர்வால், அஸ்வின், இஷாந்த் ‌ஷர்மா ஆகியோர் கவுண்டி போட்டிகளில் விளையாட உள்ளனர். இவர்களில் புஜாரா ஏற்கனவே யார்க்ஷைர் கவுண்டி அணிக்காக 3 ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதால், இந்த ஆண்டிலும் குறிப்பிட்ட ஆட்டங்களில் அந்த அணிக்காக ஆடுவார். டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரஹானே அனேகமாக ஹாம்ப்ஷைர் அணிக்காக ஆடுவார் என்று தெரிகிறது. 3 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டியின் ஒப்புதலுக்காக அவர் காத்திருக்கிறார். எஸ்செக்ஸ், லீசெஸ்டர்ஷைர், நாட்டிங்காம்ஷைர் ஆகிய அணிகளுடனும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

டியூக்ஸ் பந்து

குறைந்தது 3 அல்லது 4 ஆட்டங்களில் வீரர்களை விளையாட வைக்க வேண்டும் என்பது கிரிக்கெட் வாரியத்தின் திட்டமாகும். கவுண்டி கிரிக்கெட்டில் ‘டியூக்ஸ்’ பந்துகள் பயன்படுத்தப்படும். அதே வகை பந்துகள் தான் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

அதனால் கவுண்டி போட்டி நமது வீரர்களுக்கு மிகச்சிறந்த பயிற்சியாக அமையும். கவுண்டியில் லெவல்1 அல்லது லெவல்2 வகை முதல்தர போட்டிகளில் இந்திய டெஸ்ட் வீரர்கள் விளையாடுவார்கள் என்று கிரிக்கெட் வாரிய மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.


Next Story