ஆதிக்கத்தை நிலைநாட்டிய ஆஸ்திரேலியா (2007)


ஆதிக்கத்தை நிலைநாட்டிய ஆஸ்திரேலியா (2007)
x
தினத்தந்தி 24 May 2019 12:04 AM GMT (Updated: 24 May 2019 12:04 AM GMT)

2007ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலியா அணி சாம்பியன் பட்டம் வென்றது.

9-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2007-ம் ஆண்டு மார்ச் 13-ந்தேதி முதல் ஏப்ரல் 28-ந்தேதி வரை வெஸ்ட் இண்டீசில் முதல்முறையாக நடந்தது. அயர்லாந்து, பெர்முடா அணிகள் அறிமுகம் ஆகின. இதன் மூலம் அணிகளின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்தது. அதிக அணிகள் பங்கேற்ற உலக கோப்பை போட்டி இது தான்.

அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதின. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடித்த அணிகள் சூப்பர்-8 சுற்றுக்கு முன்னேறின. அதே சமயம் முன்னாள் சாம்பியன்கள் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் லீக் சுற்றுடன் வெளியேற்றப்பட்டன. முந்தைய உலக கோப்பையில் தோல்வியே சந்திக்காமல் வீறுநடை போட்ட ஆஸ்திரேலியாவின் பேராதிக்கம் இந்த உலக கோப்பையிலும் நீடித்தது.

கேப்டன் ரிக்கிபாண்டிங், கில்கிறிஸ்ட், மேத்யூ ஹைடன், மைக்கேல் கிளார்க், சைமண்ட்ஸ், மைக் ஹஸ்சி, வாட்சன், மெக்ராத், நாதன் பிராக்கென், பிராட் ஹாக் என்று நட்சத்திர பட்டாளங்களை உள்ளடக்கிய ஆஸ்திரேலியாவை சந்தித்த எல்லா அணிகளுக்கும் மூக்குடைந்தன.

லீக் சுற்றில் மூன்று வெற்றி, சூப்பர்-8 சுற்றில் 7 வெற்றி என்று கம்பீரமாக அரைஇறுதிக்கு வந்த ஆஸ்திரேலியா அரைஇறுதியில் தென்ஆப்பிரிக்காவை புரட்டியெடுத்தது. இதில் தென்ஆப்பிரிக்காவை 149 ரன்னில் முடக்கிய ஆஸ்திரேலியா அந்த இலக்கை 31.3 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. மற்றொரு அரைஇறுதியில் இலங்கை அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை தோற்கடித்தது.

இதையடுத்து பிரிட்ஜ்டவுனில் ஆஸ்திரேலியா-இலங்கை அணிகள் இடையே இறுதி ஆட்டம் அரங்கேறியது. மழையால் 38 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் குவித்தது. விக்கெட் கீப்பர் கில்கிறிஸ்ட் 104 பந்துகளில் 13 பவுண்டரி, 6 சிக்சருடன் 149 ரன்கள் நொறுக்கினார். உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சிறப்பையும் பெற்றார்.

தொடர்ந்து ஆடிய இலங்கை அணியில் ஜெயசூர்யா (63 ரன்), சங்கக்கரா (54 ரன்) நின்ற வரை வாய்ப்பு தென்பட்டது. அவர்கள் அவுட் ஆனதும் ஆட்டம் ஆஸ்திரேலியா பக்கம் திரும்பியது. மீண்டும் மழை குறுக்கிட்டதால் இலங்கை அணி 36 ஓவர்களில் 269 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. ஆஸ்திரேலிய அணி வெற்றியின் விளிம்பில் இருந்த போது, போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது 33 ஓவர் முடிந்திருந்தது. டக்வொர்த்-லீவிஸ் விதிமுறைப்படி அந்த சமயத்தில் ஆஸ்திரேலியா 37 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. அதனால் வெற்றி பெற்று விட்டதாக ஆஸ்திரேலிய வீரர்கள் மகிழ்ச்சியில் கொண்டாடினர். ஆனால் நடுவர்கள் அலிம்தரும், ஸ்டீவ் பக்னரும் ‘போட்டி இன்னும் நிறைவடையவில்லை, மறுநாள் ஆட்டத்தை தொடரலாம்’ என்று யோசனை கூறியதும் ஆஸ்திரேலிய வீரர்கள் திகைத்து போனார்கள். ஏனெனில் ஒரு நாள் போட்டியில் 2-வது பேட் செய்யும் அணி குறைந்தது 20 ஓவர்களை நிறைவு செய்து விட்டாலே அதன் பிறகு எந்த பாதிப்பு ஏற்பட்டாலும் ‘டக்வொர்த்-லீவிஸ்’ விதிமுறைப்படி முடிவை அறிவிக்க வேண்டும். இது கூடவா நடுவர்களுக்கு தெரியவில்லை என்று ஆஸ்திரேலிய வீரர்கள் குழம்பி போனார்கள்.

இதைத் தொடர்ந்து இரண்டு தரப்பு கேப்டன்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பிறகு ஆட்டத்தை தொடர இலங்கை கேப்டன் மஹேலா ஜெயவர்த்தனே சம்மதித்தார். வெளிச்சம் இல்லாததால் எஞ்சிய 3 ஓவர்களுக்கு சுழற்பந்து வீச்சாளரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதன்படி கடைசி 3 ஓவர்களும் ஏறக்குறைய இருளில் தான் நடந்தது. இலங்கை அணியால் 36 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 215 ரன்களே எடுக்க முடிந்தது.

முடிவில் ஆஸ்திரேலியா 53 ரன்கள் வித்தியாசத்தில் வாகை சூடி 4-வது முறையாக உலக கோப்பையை சொந்தமாக்கியது. கடைசி கட்டத்தில் கேலிக்கூத்தான முடிவுகளை எடுத்த நடுவர்கள் பிறகு தவறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டனர்.

அதிக ரன்கள் குவித்தோர் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹைடனும் (3 சதத்துடன் 659 ரன்), பந்து வீச்சில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கிளைன் மெக்ராத்தும் (26 விக்கெட்) முதலிடம் பிடித்தனர். தொடர்நாயகனாக தேர்வு செய்யப்பட்ட மெக்ராத் இந்த போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார்.

உலக கோப்பையில் கடைசியாக ஆடிய 29 ஆட்டங்களில் தோல்வியே சந்திக்காமல் ஆஸ்திரேலியாவின் பயணம் நீடித்தது ஒரு புறம் என்றால், இந்த உலக கோப்பையில் தென்ஆப்பிரிக்க வீரர் கிப்ஸ் ஒரே ஓவரில் 6 பந்திலும் சிக்சர் அடித்தது குறிப்பிடத்தக்க நிகழ்வாக பேசப்பட்டது. நெதர்லாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சுழற்பந்து வீச்சாளர் டான் வான் புங்கே வீசிய ஒரே ஓவரில் 6 பந்தையும் சிக்சராக மாற்றி கிப்ஸ் வரலாறு படைத்தார். ஒரு நாள் போட்டியில் ஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த முதல் வீரர் கிப்ஸ் தான்.

பயிற்சியாளர் மர்ம மரணம்

இந்த உலக கோப்பை தொடரின் போது பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் பாப் உல்மரின் மரணம் பரபரப்பை ஏற்படுத்தியது. பாகிஸ்தான் அணி, அயர்லாந்திடம் மண்டியிட்ட மறுநாள் (மார்ச் 18-ந்தேதி) கிங்ஸ்டனில் உள்ள நட்சத்திர ஓட்டலில் உல்மர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததால் பாகிஸ்தான் வீரர்களிடம் கொலை வழக்கு கோணத்தில் போலீசார் கிடுக்குபிடி விசாரணை மேற்கொண்டனர். ஏற்கனவே தோல்வியால் நொந்து போயிருந்த பாகிஸ்தான் வீரர்களுக்கு இது இன்னொரு பேரிடியாக அமைந்தது. உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இரு ஒரு கருப்பு நாள் என்று வர்ணிக்கப்பட்டது.

சில மாத கால விசாரணைக்கு பிறகு பாப் உல்மர் மரணம் இயற்கையானது என்று ஜமைக்கா போலீசார் அறிவித்து வழக்கை முடித்தனர். 58 வயதான பாப் உல்மர் இங்கிலாந்து முன்னாள் வீரர் என்றாலும் அவர் இந்தியாவில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கத்துக்குட்டியிடம் உதை வாங்கிய ஜாம்பவான்கள்

இந்த உலக கோப்பையை போல் அதிர்ச்சி தோல்வி வேறு எந்த உலக கோப்பையிலும் நடந்ததில்லை. ‘பி’ பிரிவில் இடம் பெற்றிருந்த ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி தனது முதல் லீக்கில் வங்காளதேசத்துடன் மோதியது. முதலில் பேட் செய்த இந்திய அணி 49.3 ஓவர்களில் 191 ரன்னில் சுருண்டது. பின்னர் தமிம் இக்பால் (51 ரன்), முஷ்பிகுர் ரஹிம் (56 ரன்), ஷகிப் அல்-ஹசன் (53 ரன்) ஆகிய இளம் வீரர்களின் அபாரமான ஆட்டத்தின் மூலம் வங்காளதேச அணி 48.3 ஓவர்களில் இலக்கை விரட்டிப்பிடித்தது. அப்போதே இந்திய ரசிகர்களின் இதயமும் சுக்குநூறானது.

அடுத்து கத்துக்குட்டி அணியான பெர்முடாவை சந்தித்த இந்திய வீரர்கள் அந்த அணியை துவம்சம் செய்தனர். ஷேவாக் (114 ரன்), சவுரவ் கங்குலி (89 ரன்), யுவராஜ்சிங் (83 ரன்), சச்சின் தெண்டுல்கர் (57 ரன்) ஆகியோரின் சரடிவெடியால் இந்தியா 5 விக்கெட்டுக்கு 413 ரன்கள் குவித்தது. உலக கோப்பை போட்டியில் 400 ரன்களை கடந்த முதல் அணி என்ற பெருமையை இந்தியா பெற்றது. பெர்முடாவை 257 ரன்கள் வித்தியாசத்தில் பதம் பார்த்த இந்தியா கடைசி லீக்கில் கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியுடன் இலங்கையை எதிர்கொண்டது. இதில் இலங்கை நிர்ணயித்த 255 ரன்கள் இலக்கை நோக்கி களம் கண்ட இந்திய வீரர்கள் பொறுப்பற்ற முறையில் ஆடி 43.3 ஓவர்களில் 185 ரன்களில் அடங்கிப் போனார்கள். அதிகபட்சமாக டிராவிட் 60 ரன்கள் எடுத்தார். தெண்டுல்கர், விக்கெட் கீப்பர் டோனி டக்-அவுட் ஆனார்கள். இந்த தோல்வியின் மூலம் இந்திய அணி முதல் சுற்றுடன் மூட்டையை கட்டியது.

இதனால் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் டோனி உள்ளிட்ட சில வீரர்களின் வீடுகளில் கற்களை வீசி தாக்கினார்கள். டிராவிட், கங்குலி ஆகியோருக்கு இதுவே கடைசி உலக கோப்பையாக அமைந்தன.

இந்திய அணியின் பரம எதிரியான முன்னாள் சாம்பியன் பாகிஸ்தானுக்கும் இதே போன்று மரண அடி விழுந்தது. அந்த அணி லீக் சுற்றில் (டி பிரிவு) எதிர்பாராத வகையில் அயர்லாந்திடம் ‘சரண்’ அடைந்தது. இதில் பாகிஸ்தான் அணி 45.4 ஓவர்களில் வெறும் 132 ரன்கள் மட்டுமே எடுக்க இந்த ரன்களை எட்டிப்பிடித்த அயர்லாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பாகிஸ்தானை போட்டியில் இருந்து துரத்தியடித்தது.

ஏற்கனவே ஐ.சி.சி.யின் கெடுபிடியாலும், டிக்கெட் விலை உயர்வாலும் ரசிகர்கள் வருகை மந்தமாக இருந்த நிலையில், இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ஆரம்ப கட்டத்திலேயே ‘அவுட்’ ஆனதால் பொருளாதார ரீதியாக போட்டியை நடத்திய வெஸ்ட் இண்டீசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது.



Next Story