உலக கோப்பை கிரிக்கெட்டில் 500 ரன்கள் குவிக்கப்படுமா? - இந்திய கேப்டன் விராட் கோலி பதில்


உலக கோப்பை கிரிக்கெட்டில் 500 ரன்கள் குவிக்கப்படுமா? - இந்திய கேப்டன் விராட் கோலி பதில்
x
தினத்தந்தி 24 May 2019 12:11 AM GMT (Updated: 24 May 2019 12:11 AM GMT)

உலக கோப்பை கிரிக்கெட்டில் 500 ரன்களை இங்கிலாந்து அணி குவிக்க வாய்ப்பு இருப்பதாக இந்திய கேப்டன் கோலி கூறியுள்ளார்.

லண்டன்,

உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா வருகிற 30-ந்தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் 10 அணிகளின் கேப்டன்களும் லண்டனில் நேற்று ஒரே மேடையில் சந்தித்து உரையாடினார்கள்.

அப்போது அவர்கள் கூறியதாவது:-

இயான் மோர்கன் (இங்கிலாந்து): உலகின் டாப்-10 அணிகள் இந்த உலக கோப்பையில் களம் இறங்குகின்றன. யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. போட்டிக்கு நாங்கள் சிறந்த முறையில் தயாராகி உள்ளோம்.

விராட் கோலி (இந்தியா): உள்ளூர் சூழலில் ஆடும் இங்கிலாந்து அணி இந்த தொடரில் மிகவும் வலுமிக்கதாக காணப்படுகிறது. எல்லா அணிகளுமே பலம் வாய்ந்தது தான். அது மட்டுமின்றி ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டி உள்ளது. எனவே சவால்மிக்க ஒரு உலக கோப்பை தொடராக இது இருக்கும். அத்துடன் அதிக ரன்கள் குவிக்கப்படும் உலக கோப்பை தொடராக இருக்கப்போகிறது. ஆரம்ப கட்டத்தில் ரன்மழையை எதிர்பார்க்கலாம். ஆனால் தொடரின் பிற்பகுதியில் இதே நிலைமை இருக்காது. அப்போது 250 ரன்கள் எடுத்து வெற்றி பெறும் அணிகளை நீங்கள் பார்க்கப்போகிறீர்கள். ஏனெனில் நெருக்கடி அந்த அளவுக்கு இருக்கும். இந்த உலக கோப்பையில் முதல்முறையாக 500 ரன்கள் எடுக்கப்பட வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்கப்படுகிறது. என்னை பொறுத்தவரை இங்கிலாந்து அணியே 500 ரன்கள் இலக்கை எட்டும் போல் தோன்றுகிறது. அவர்கள் முதல் பந்தில் இருந்து 50 ஓவரும் முழுமையாக பந்தை அடித்து நொறுக்கக்கூடியவர்கள்.

ஆரோன் பிஞ்ச் (ஆஸ்திரேலியா): வார்னரும், ஸ்டீவன் சுமித்தும் அணிக்கு திரும்பி இருக்கிறார்கள். அவர்கள் அணிக்கு நிறைய பங்களிப்பை அளித்து இருக்கிறார்கள். இதனால் எங்களது நம்பிக்கை நம்ப முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

சர்ப்ராஸ் அகமது (பாகிஸ்தான்): எல்லா அணிகளுமே கனகச்சிதமான கலவையில் அமைந்துள்ளது. பல அற்புதமான ஆட்டங்களை ரசிகர்கள் பார்க்கப்போகிறார்கள். 1992-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற பிறகு இங்கிலாந்தில் நடந்த 1999-ம் ஆண்டு உலக கோப்பையில் இறுதி சுற்றுக்கு வந்தோம். 2017-ம் ஆண்டு இதே இடத்தில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றினோம். இங்கிலாந்தில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். அதனால் நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்.

பாப் டு பிளிஸ்சிஸ் (தென்ஆப்பிரிக்கா): அனைத்து அணிகளும் தங்களுக்குள் மோத வேண்டும் என்ற போட்டி அட்டவணை பரவசப்படுத்துகிறது. பந்து வீச்சாளர்கள் சாதிக்கும் அணிக்கே இந்த உலக கோப்பையை வெல்ல வாய்ப்பு இருப்பதாக கருதுகிறேன்.

கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து): கடந்த உலக கோப்பையை விட மேலும் ஒரு படி முன்னேறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. முந்தைய உலக கோப்பையுடன் ஒப்பிடும் போது அணிக்கு சில புதிய வீரர்கள் வருகை தந்துள்ளனர்.

ஜாசன் ஹோல்டர் (வெஸ்ட் இண்டீஸ்): தகுதி சுற்றில் கடினமாக உழைத்து இங்கு வந்துள்ளோம். எல்லா அணிகளுக்கு எதிராகவும் முழு திறமையை வெளிப்படுத்த விரும்புகிறோம். வெற்றி பெறுவதற்குரிய தகுதியான அணியாக இருப்போம்.

கருணாரத்னே (இலங்கை): முன்கூட்டியே இங்கிலாந்துக்கு வந்து இங்குள்ள சூழலில் பழகி இருக்கிறோம். அது மட்டுமின்றி நாங்கள் நல்ல நிலையில் உள்ளோம். அதனால் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்று நம்புகிறேன்.

குல்படின் நைப் (ஆப்கானிஸ்தான்): கிரிக்கெட் உலகில் சிறந்த அணிகளுக்கு எதிராக விளையாட இருப்பது உற்சாகம் அளிக்கிறது. போட்டியை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளோம்.

மோர்தசா (வங்காளதேசம்): எங்கள் அணியில் அனுபவ வீரர்களும், இளம் வீரர்களும் கலந்து இடம் பெற்றுள்ளனர். கிரிக்கெட்டில் குறிப்பிட்ட நாள் சாதகமாக அமைந்தால் யாரையும் வீழ்த்தி விட முடியும். தொடக்கம் நன்றாக அமைவது முக்கியம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story