சொந்த மண்ணில் ஜொலித்த இந்தியா (2011)


சொந்த மண்ணில் ஜொலித்த இந்தியா (2011)
x
தினத்தந்தி 24 May 2019 11:45 PM GMT (Updated: 24 May 2019 11:45 PM GMT)

2011-ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.


10-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய ஆசிய நாடுகள் இணைந்து 2011-ம் ஆண்டு பிப்ரவரி 19-ந்தேதி முதல் ஏப்ரல் 2-ந்தேதி வரை நடத்தின. பாகிஸ்தானும் இந்த உலக கோப்பையை நடத்துவதில் முதலில் கைகோர்ப்பதாக இருந்தது. ஆனால் பாகிஸ்தானில் 2009-ம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவம் எதிரொலியாக பாகிஸ்தான் கழற்றி விடப்பட்டது.

இந்த உலக கோப்பையில் பெர்முடா, ஸ்காட்லாந்து நீக்கப்பட்டு அணிகளின் எண்ணிக்கை 14 ஆக குறைந்தது. முந்தைய உலக கோப்பை போட்டிகளில் கடைபிடிக்கப்பட்ட சூப்பர் சிக்ஸ், சூப்பர்-8 சுற்று முறைகள் தூக்கி எறியப்பட்டன. கடந்த உலக கோப்பையில் குறைந்த அணிகளுடன் குரூப் பிரிக்கப்பட்டதால் ஒரு சில அதிர்ச்சி தோல்விகளால் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் எதிர்பாராத விதமாக முதல் சுற்றுடன் மூட்டையை கட்டின. பெரிய அணிகள் ஆரம்பத்திலேயே வெளியேறுவதை தவிர்ப்பதற்காக இந்த தடவை அணிகள் இரு பிரிவாக மட்டும் பிரிக்கப்பட்டன. நடுவர்களின் தீர்ப்பில் சந்தேகம் இருந்தால் அதை எதிர்த்து அப்பீல் செய்யும் டி.ஆர்.எஸ். முறை அறிமுகம் ஆனது.

அணிகள் லீக் சுற்றில் மோதிய பிறகு ஒவ்வொரு பிரிவிலும் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதியை எட்டும் வகையில் போட்டி அட்டவணை அமைக்கப்பட்டிருந்தது.

சொந்த மண்ணில் டோனி தலைமையில் அடியெடுத்து வைத்த இந்திய அணி ‘பி’ பிரிவில் தனது தொடக்க லீக்கில் வங்காளதேசத்தை எதிர்கொண்டது. முந்தைய உலக கோப்பையில் அடைந்த தோல்விக்கு வட்டியும் முதலுமாக பதிலடி கொடுத்த இந்திய அணி 4 விக்கெட்டுக்கு 370 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது. ஷேவாக் 175 ரன்களும், விராட் கோலி 100 ரன்களும் விளாசி அமர்க்களப்படுத்தினர்.

இதன் பிறகு தென்ஆப்பிரிக்காவிடம் தோல்வியை தழுவிய இந்திய அணி நெதர்லாந்து, அயர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளை தோற்கடித்து கால்இறுதியை உறுதி செய்தது. பெங்களூருவில் நடந்த இந்தியா-இங்கிலாந்து இடையிலான பரபரப்பான லீக் ஆட்டம் திரில்லிங்காக நகர்ந்து கடைசியில் சமனில் (இரு அணியும் தலா 338 ரன்) முடிந்தது. இதில் சச்சின் தெண்டுல்கர் (120 ரன்) சதம் அடித்தார்.

‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணியின் வீறுநடை முடிவுக்கு வந்தது. உலக கோப்பையில் 34 ஆட்டங்களில் தோல்வியே சந்திக்காமல் கம்பீரமாக வலம் வந்த ஆஸ்திரேலிய அணியை கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அடக்கி வெற்றிப்பயணத்துக்கு முட்டுக்கட்டை போட்டது. இருப்பினும் ஆஸ்திரேலிய அணி சிக்கலின்றி கால்இறுதிக்கு முன்னேறியது.

கால்இறுதி ஆட்டங்களில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசையும், நியூசிலாந்து 49 ரன் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவையும், இலங்கை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தையும் விரட்டின. ‘நாக்-அவுட்’ சுற்றுகளில் வெற்றி பெற்றதில்லை என்ற தென்ஆப்பிரிக்காவின் துரதிர்ஷ்டம் இந்த உலக கோப்பையிலும் நீடித்தது.

மற்றொரு கால்இறுதியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் ஆமதாபாத்தில் மோதியது. இதில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 261 ரன்கள் இலக்கை இந்திய அணி தெண்டுல்கர் (53 ரன்), கம்பீர் (50 ரன்), யுவராஜ்சிங் (57 ரன்) ஆகியோரின் அரைசதங்களின் உதவியுடன் 47.4 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. உலக கோப்பையில் 24 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவிடம் உதை வாங்கிய ஆஸ்திரேலிய அணி 1992-ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக இறுதிசுற்றுக்கு வர முடியாமல் வெளியேறியது.

இதைத் தொடர்ந்து இந்திய அணி அரைஇறுதியில் பரம எதிரியான பாகிஸ்தானை மொகாலியில் சந்தித்தது. இரு நாட்டு பிரதமர்களும் போட்டியை காண வருகை தந்த நிலையில் உச்சக்கட்ட டென்ஷனுக்கு மத்தியில் வீரர்கள் களத்தில் மல்லுகட்டினர். முதலில் பேட் செய்த இந்தியா 9 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் சேர்த்தது. 6 முறை கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பிய தெண்டுல்கர் அதிகபட்சமாக 85 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து ஆடிய அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் 231 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் 29 ரன்கள் வித்தியாசத்தில் வாகை சூடிய இந்திய அணி, உலக கோப்பை தொடரில் பாகிஸ்தானிடம் தோற்றதில்லை என்ற பெருமையையும் தக்க வைத்துக் கொண்டது. இன்னொரு அரைஇறுதியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை தோற்கடித்தது.

மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் இந்தியா-இலங்கை அணிகள் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் பலப்பரீட்சையில் இறங்கின. உலக கோப்பை வரலாற்றில் இறுதி ஆட்டத்தில் இரு ஆசிய அணிகள் நேருக்கு நேர் சந்திப்பது இதுவே முதல் முறையாகும். ‘டாஸ்’ போடப்பட்ட போது இலங்கை கேப்டன் சங்கக்கரா என்ன கேட்டார் என்பது சரியாக காதில் விழவில்லை என்று போட்டி நடுவர் கூறியதால் குழப்பம் ஏற்பட்டது. பிறகு 2-வது முறையாக நாணயத்தை மேலே சுண்டிய வினோதம் அரங்கேறியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்தது. மஹேலா ஜெயவர்த்தனே சதம் (103 ரன்) அடித்தார். அடுத்து ஆடிய இந்திய அணியில் ஷேவாக் (0), தெண்டுல்கர் (18 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை. இதன் பின்னர் கவுதம் கம்பீர் (97 ரன்), விராட் கோலி (37 ரன்) அணியை சரிவில் இருந்து மீட்டெடுத்தனர். மிடில் வரிசையில் விசுவரூபம் எடுத்த கேப்டன் டோனி அதிரடியான ஷாட்டுகளால் அரங்கை அதிர வைத்ததுடன், கடைசியில் தனக்கே உரிய பாணியில் பந்தை சிக்சருக்கு அனுப்பி இலக்கை எட்ட வைத்தார். இந்திய அணி 48.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 277 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு, 28 ஆண்டுகளுக்கு பிறகு 2-வது முறையாக உலக கோப்பையை உச்சிமுகர்ந்தது. 91 ரன்களுடன் (8 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் இருந்த டோனி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

ஆல்-ரவுண்டராக ஜொலித்து மகத்தான பங்களிப்பை அளித்த இந்திய வீரர் யுவராஜ்சிங் (சதம், 4 அரைசதம் உள்பட 362 ரன் மற்றும் 15 விக்கெட்) தொடர்நாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த உலக கோப்பைக்கு பிறகு யுவராஜ்சிங்குக்கு நுரையீரல் பகுதியில் புற்றுநோய் கட்டி இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதும், அதில் இருந்து குணமடைந்தாலும் அதன் பிறகு அவரது கிரிக்கெட் வாழ்க்கை தொய்வடைந்து போனதும் நினைவு கூரத்தத்கது.

1989-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் கால்பதித்த ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் உலக கோப்பை கனவு ஒரு வழியாக 22 ஆண்டுகளுக்கு பிறகு நனவானது. இந்த உலக கோப்பையை வசப்படுத்தி தெண்டுல்கருக்கு சமர்ப்பிப்போம் என்று சூளுரைத்த இந்திய வீரர்கள் எடுத்த சபதத்தை நிறைவேற்றி மைதானத்தில் அவரை தோளில் தூக்கி வலம் வந்தனர். உலக கோப்பையை கையில் ஏந்திய போது ஆனந்த கண்ணீர் விட்ட தெண்டுல்கர், விடிய விடிய மகிழ்ச்சியை சக வீரர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கொண்டாடினார். தெண்டுல்கருக்கு இது 6-வது உலக கோப்பை போட்டியாகும். இதன் மூலம் அதிக உலக கோப்பை தொடரில் பங்கேற்றவரான பாகிஸ்தானின் ஜாவித் மியாண்டட்டின் சாதனையை சமன் செய்தார். இந்த தொடரில் 2 சதம் உள்பட 482 ரன்கள் எடுத்த தெண்டுல்கருக்கு இதுவே கடைசி உலக கோப்பை போட்டியாகும்.

இந்த உலக கோப்பையில் மொத்தம் 24 சதங்கள் பதிவாகின. அதில் ஒரு சதத்தை பற்றி மட்டும் குறிப்பிட்டாக வேண்டும். இங்கிலாந்துக்கு எதிரான லீக்கில் அயர்லாந்து வீரர் கெவின் ஓ பிரையன் 50 பந்துகளில் 13 பவுண்டரி, 6 சிக்சருடன் சதம் அடித்து வியக்க வைத்தார். உலக கோப்பையில் மின்னல்வேக சதம் இது தான். அவரது செஞ்சுரியால் அயர்லாந்து அணி 328 ரன்கள் இலக்கையும் எட்டிப்பிடித்து அசத்தியது. இருந்தாலும் அயர்லாந்தால் அடுத்த சுற்றை எட்ட முடியவில்லை.

உலகம் முழுவதும் சுமார் 220 கோடி பேர் இந்த உலக போட்டியை கண்டுகளித்தனர். அதிக பேர் பார்த்த உலக கோப்பை போட்டியாகவும் இது அமைந்தது.

எல்லா சாம்பியன்களையும் வீழ்த்திய இந்தியா

இந்திய அணி அனைத்து முன்னாள் உலக சாம்பியன்களையும் வரிசையாக வீழ்த்திய நிகழ்வு இந்த உலக கோப்பையில் சுவாரஸ்யமான ஒரு அம்சமாகும். கடைசி லீக்கில் 1975, 1979-ம் ஆண்டு சாம்பியனான வெஸ்ட் இண்டீசை 80 ரன்கள் வித்தியாசத்தில் பதம் பார்த்த இந்திய அணி அதன் பிறகு கால்இறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு ‘ஆப்பு’ அடித்தது. அரைஇறுதியில் 1992-ம் ஆண்டு சாம்பியனான பாகிஸ்தானை தெறிக்கவிட்ட இந்தியா இறுதி ஆட்டத்தில் 1996-ம் ஆண்டு சாம்பியனான இலங்கையை சாய்த்து சாம்பியன்களுக்கெல்லாம் சாம்பியன் என்பதை நிரூபித்தது.




Next Story