உலக கோப்பைக்குப் பிறகு ஓய்வை அறிவிக்க இருக்கும் 5 முன்னணி கிரிக்கெட் வீரர்கள்..!


உலக கோப்பைக்குப் பிறகு ஓய்வை அறிவிக்க இருக்கும் 5 முன்னணி கிரிக்கெட் வீரர்கள்..!
x
தினத்தந்தி 25 May 2019 8:13 AM GMT (Updated: 25 May 2019 11:33 AM GMT)

விளையாட்டை பொறுத்தவரை ஒய்வு என்பது தவிர்க்க முடியாதது. நமக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்களில் பெரும்பாலோர் தங்கள் ஓய்வை அறிவிக்க காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

லண்டன்,

கிரிக்கெட் உலகின் திருவிழா என்றால் அது உலக கோப்பை தொடராகத்தான் இருக்க முடியும். 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐசிசியால் நடத்தப்படும் இந்த தொடர், வரும் 30 ஆம் தேதி துவங்குகிறது. 12-வது உலக கோப்பை கிரிக்கெட் தொடரான இதில், 10 முன்னணி கிரிக்கெட் அணிகள் பங்கேற்கின்றன. கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏறத்தாழ 2 மாதங்கள் தீனி போடும் தொடராக இந்த தொடர் இருக்கும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை. அதேபோல், பல்வேறு அணிகளைச்சேர்ந்த நட்சத்திர வீரர்கள் பலர் இந்த உலக கோப்பை தொடரோடு, சர்வதேச கிரிக்கெட்டுக்கு, முழுக்கு போடலாம் என தெரிகிறது.

விளையாட்டை பொறுத்தவரை ஓய்வு என்பது தவிர்க்க முடியாதது. நமக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்களில் பெரும்பாலோர் தங்கள் ஓய்வை அறிவிக்க காத்துக்கொண்டு இருக்கின்றனர்.  கனத்த இதயத்துடன் அவர்களுக்கு விடைகொடுக்க ரசிகர்களும் தயாராகிவிட்டனர்.  ஓய்வை அறிக்க இருக்கும் 5 நட்சத்திர வீரர்களை கீழ் காணலாம். 

டோனி

37 வயதான இவர் பல ஆண்டுகளாக இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழ்கிறார். இந்தியாவின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக வலம் வந்த டோனிக்கு இந்தியா மட்டும் அல்லாது உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். சமீப காலங்களில் இவர்  நல்ல பார்மில் உள்ளார். 

இதற்கு அண்மையில், ஐபிஎல் தொடரில், டோனி எதிரணியை கலங்கடித்ததே சான்று. மிகச்சிறந்த பினிஷர்களில் ஒருவர் என்று புகழப்படும் டோனி வயது மூப்பு மற்றும் ரிஷ்ப் பண்ட் போன்ற இளம் வீரர்களின் சிறப்பான செயல்பாடுகள் ஆகியவையால் டோனி தனது ஓய்வை அறிவிப்பார் என பரவலாக கிரிக்கெட் வட்டாரத்தில் பேசும் செய்தியாக இருக்கிறது. எனினும் டோனி தொடர்ந்து விளையாடுவார் என்று அவரது ரசிகர்கள் நம்பிக்கையோடு கூறுகின்றனர்.

கிரிஸ் கெயில்,

 39  வயதான இவர், தனது அதிரடி ஆட்டதின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர், இதுவரை இவர் மேற்கிந்திய தீவுகளுக்காக நான்கு உலக கோப்பை தொடர்களில் பங்கேற்று உள்ளார். 2018 ஆம் ஆண்டு இவரது கிரிக்கெட்டிற்கான மிக மோசமான ஆண்டுகளில் இதுவும் ஒன்று.  

இருப்பினும்  வரவுள்ள உலக கோப்பையில் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்துவார் என எதிர் பார்க்கப்படுகிறது. இந்த உலக கோப்பையில் கடைசி 'கெய்ல் புயல்' ஒன்றை ரசிகர்களுக்கு பரிசாக வழங்குவதற்கான சரியான வாய்ப்பாக இருக்கும்.

ராஸ் டெய்லர்

 35  வயதான இவர், 2006 ஆம் ஆண்டில் தனது முதல் ஒரு நாள் போட்டியை ஆடினார், நியூசிலாந்து அணிக்காக பல  போட்டிகளில் நல்ல வீரராகவும் கேப்டனாகவும் செயல்பட்டு உள்ளார். நியூசிலாந்தின் முன்னாள் கேப்டன் டெய்லர் 2018 ம் ஆண்டில் 11 ஒருநாள் போட்டிகளில் 639 ரன்களை எடுத்து நல்ல பார்மில் உள்ளார், இருப்பினும்  வயது மூப்பு மற்றும் நிலையற்ற ஆட்டம் ஆகியவையால் இவர் தனது ஓய்வை அறிவிப்பார் என  எதிர்பார்க்கலாம்

டேல் ஸ்டெயின்

35  வயதான தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளரான  இவர், ஏறத்தாழ 800-க்கும் மேற்பட்ட விக்கெட்களை கைப்பற்றியிள்ளார், 2016 ஆம் ஆண்டுக்கு பிறகு தென் ஆப்பிரிக்க அணியில் பெரிய அளவில் இடம் பெறவில்லை எனினும் ஹாப்கிஸ் கவுண்டி கிரிக்கெட் கிளப் இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் உள்நாட்டு முதல்-வகுப்பு கிரிக்கெட் சர்க்யூட் ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்டதால் உலக கோப்பை அணியில் இடம் பெற்றுள்ளார். இவரும் தனது ஓய்வை அறிவிப்பார் என கூறப்படுகிறது. 

ஹசிம் அம்லா

36 வயதான ஹசிம் அம்லா, தென் ஆப்பிரிக்க அணியின் ரன் மெஷின் என்று சொன்னால் அது மிகையாது. 174 போட்டிகள் விளையாடியுள்ள  அம்லா, பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். அதிவேகமாக 2 ஆயிரம், 3 ஆயிரம், 4 ஆயிரம், 5 ஆயிரம், 6 ஆயிரம், 7 ஆயிரம் ரன்கள் அடித்த வீரர்கள் சாதனையை அம்லா தன்னகத்தே வைத்துள்ளார்.   

27 சதங்கள் அடித்துள்ள அம்லாவுக்கு இதுதான் கடைசி உலக கோப்பை தொடராக இருக்கும். ஒருமுறை கூட உலக கோப்பையை கைப்பற்றாத தென் ஆப்பிரிக்கா, வெற்றி பெறுவோம் என தீர்க்கமாக நம்புகிறது. 

Next Story