வீராட் கோலி எனக்கு பரிசளித்த மேஜிக் பேட்டை திருடி விட்டனர்- ரஷீத் கான் புலம்பல்


வீராட் கோலி எனக்கு பரிசளித்த மேஜிக் பேட்டை திருடி விட்டனர்- ரஷீத் கான் புலம்பல்
x
தினத்தந்தி 3 Jun 2019 8:00 AM GMT (Updated: 3 Jun 2019 8:00 AM GMT)

வீராட் கோலி எனக்கு பரிசளித்த மேஜிக் பேட்டை திருடி விட்டனர் என ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் கூறி உள்ளார்.

ஐபிஎல் போட்டி காரணமாக தற்போது அனைத்து அணியை சேர்ந்த வீரர்களும், இந்திய அணியின் வீரர்களுக்கு நெருங்கிய நண்பர்களாகி விட்டனர். வெவ்வேறு அணி வீரர்கள் ஒரே அணியில் இருப்பதால், இந்திய வீரர்களுக்கு பல புதிய நண்பர்கள் கிடைத்து இருக்கிறார்கள். இதனால் தற்போது ரஷீத் கானும், வீராட் கோலியும் கூட நல்ல நண்பர்களாகி உள்ளனர்.

இதையடுத்து வீராட் கோலி, ரஷீத் கானுக்கு 'பேட் பரிசு' ஒன்று கொடுத்து உள்ளார். கடந்த ஐபிஎல் போட்டியில் இந்த பரிசை அவர் ரஷீத் கானுக்கு கொடுத்துள்ளார். ஐபிஎல் போட்டியில் சிறப்பாக பந்து வீசியதை பாராட்டும் வகையில் வீராட் கோலி இந்த பரிசை கொடுத்துள்ளார்.

அதேபோல் பாண்ட்யாவும் இதேபோல் பேட் ஒன்றை பரிசாக ரஷீத் கானுக்கு கொடுத்து இருக்கிறார். இந்த இரண்டு பேட்டுகளையும் ரஷீத் கான் முக்கியமான போட்டிகளில் மட்டும்தான் பயன்படுத்தி வருகிறாராம். ரொம்ப அவசியம் இருக்க கூடிய போட்டிகளில் மட்டும்தான் இந்த இரண்டு பேட்டையும் அவர் பயன்படுத்தி வருகிறாராம்.

இந்த நிலையில் வீராட் கோலி கொடுத்த பேட் குறித்து பேசிய ரஷீத் கான் கூறியதாவது:-

 வீராட் கோலி கொடுத்த பேட் மிகவும் ராசியானது. அதில் நான் ஒருமுறை பவுண்டரி அடிக்க முயன்றேன். ஆனால் அது சிக்ஸ் சென்றது. எனக்கு இது பெரிய ஆச்சர்யமாக இருந்தது. நான் அந்த பேட்டில் சிறிய ஷாட் அடிக்க முயன்றால் கூட அது பெரிய ஷாட்டாக மாறும். எனக்கே அது பல முறை ஆச்சர்யமாக இருந்துள்ளது.

 அந்த பேட்டை தற்போது திருடிவிட்டார்கள். பேட்டை என் கண் முன்பே எடுத்துக் கொண்டு சென்றார்கள். எங்கள் அணியின் மூத்த வீரர் அஸ்கார் ஆப்கான் என் பேக்கில் இருந்து அந்த பேட்டை எடுத்துக் கொண்டு சென்றார். என் கண்ணுக்கு முன்பே அதை அவர் திருடினார்.

 அதன்பின் என்னிடம் வந்து, அந்த பேட்டில் நீ சிறப்பாக விளையாடினாய். இனி அது என்னுடைய பேட். அது ரொம்ப ராசியாக இருக்கிறது. நானே வைத்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டார். அவர் அந்த பேட்டில் சரியாகவே விளையாட கூடாது என்று சாபம் விடுகிறேன் என்று ரஷீத் கான் கிண்டலாக குறிப்பிட்டுள்ளார். பின்னர்,  அந்த பேட்டை அவரே வைத்துக் கொள்ளட்டும் என்று ரஷீத் கான் குறிப்பிட்டார்.

Next Story