ரசிகர்களுக்கு இலவச உணவு வழங்கும் ‘டோனி ஓட்டல்’


ரசிகர்களுக்கு இலவச உணவு வழங்கும் ‘டோனி ஓட்டல்’
x
தினத்தந்தி 17 Jun 2019 9:59 AM GMT (Updated: 17 Jun 2019 9:59 AM GMT)

தான் நடத்தி வரும் ஓட்டலில் டோனியின் ரசிகர்களுக்கு இலவசமாக உணவு வழங்கி வருகிறார் டோனியின் தீவிர ரசிகர்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி களத்திலும், களத்துக்கு வெளியேவும் தனது மகளுடன் செய்யும் க்யூட் விஷயங்கள் வைரலாவது வழக்கம். இவருக்கு இந்தியாவில் மட்டும் அல்ல, உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர் என்பது பலராலும் மறுக்கமுடியாத உண்மை. அதிலும், வெறித்தனமான ரசிகர்கள் சிலர் இவருக்காக பல்வேறு வித்தியாசமான சேவைகளை செய்தும் வருகின்றனர். 

அந்த வகையில், பிரபல கிரிக்கெட் வீரர் டோனியின் ரசிகர் ஒருவர் மேற்குவங்கத்தில் தான் நடத்தி வரும் ஓட்டலில் டோனியின் ரசிகர்களுக்கு இலவசமாக உணவு வழங்கி வருகிறார்.  மேற்குவங்கத்தில் அலிபுர்துவார் என்ற பகுதியில் சிறிய ஹோட்டல் ஒன்றை நடத்தி வருபவர் ஷம்பு போஸ். அவர் அந்த ஓட்டலுக்கு 'எம்.எஸ்.டோனி' என்றே பெயர் வைத்துள்ளார். இங்கு உணவு உண்ணவரும் வாடிக்கையாளர்கள் தாங்கள் "டோனியின் ரசிகர்கள்" என்று கூறினால் இலவச உணவு வழங்கப்படுகிறதாம்.

இதுகுறித்து ஓட்டலின் உரிமையாளர் ஷம்பு போஸ் கூறியதாவது:-

 "கிரிக்கெட்டில் எனக்கு சிறு வயது முதலே ஆர்வம் உண்டு. அதேமாதிரி கிரிக்கெட் வீரர் டோனியின் வெறித்தனமான ரசிகன் நான். எனது கிரிக்கெட் கனவு நிறைவேறவில்லை. எனவே, கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏதாவது செய்யலாம் என்று தோன்றியது. எனது திருப்திக்காக டோனியின் ரசிகர்களுக்கு இலவச உணவு அளித்து வருகிறேன். இங்கு பெங்காலி உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. இது சிறிய கடை என்றாலும் 'டோனி ஓட்டல்' என்று சொன்னால் தெரியாதவர்கள் யாரும் இல்லை. இந்த ஓட்டல் தொடங்கி இரண்டு வருடம் நிறைவைடைகிறது. எனது சேவையை தொடர்ந்து வழங்குவேன்.

அதேபோன்று என் வாழ்நாளில் டோனியை ஒருமுறை சந்தித்தால் எனது ஓட்டலுக்கு வந்து உணவருந்தும்படி அழைப்பேன். அதுவே இப்போதைக்கு எனது கனவு" என்று உணர்ச்சி பொங்க கூறியுள்ளார். 

Next Story