நாங்கள் அச்சமடையவில்லை, அரையிறுதிக்கு தகுதி பெறுவோம்: இங்கிலாந்து கேப்டன் மோர்கன் நம்பிக்கை


நாங்கள் அச்சமடையவில்லை, அரையிறுதிக்கு தகுதி பெறுவோம்: இங்கிலாந்து கேப்டன் மோர்கன் நம்பிக்கை
x
தினத்தந்தி 26 Jun 2019 6:52 AM GMT (Updated: 26 Jun 2019 6:52 AM GMT)

மீதமுள்ள இரு போட்டிகளிலும் வென்று அரையிறுதிக்கு நிச்சயம் தகுதி பெறுவோம் என்று இங்கிலாந்து கேப்டன் மோர்கன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

லண்டன்,

12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டித்தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.   இதுவரை ஆஸ்திரேலிய அணி மட்டுமே அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது.  கோப்பை வெல்லும் அணிகளில் ஒன்றாக கணிக்கப்பட்ட இங்கிலாந்து அணி,  துவக்கத்தில் அபாரமாக விளையாடியது.  தென் ஆப்பிரிக்கா,  வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, வங்காளதேச ஆகிய அணிகளை புரட்டியெடுத்த இங்கிலாந்து அணி, எளிதில் அரையிறுதியை எட்டிவிடும் என்று கணிக்கப்பட்டது. 

ஆனால்,  யாரும் எதிர்பாராத வகையில் இலங்கையிடம் இங்கிலாந்து அணி தோல்வி கண்டது.  இதைத்தொடர்ந்து வலுவான ஆஸ்திரேலிய அணியை சந்தித்த இங்கிலாந்து அணி, 64 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.  அடுத்தடுத்த தொடர் தோல்விகளால், இங்கிலாந்து அணி அரையிறுதியை எட்ட  கடும் சவால் காத்திருக்கிறது. 

இதுவரை 4 போட்டிகளில் வென்றுள்ள இங்கிலாந்து அணி அரையிறுதிக்குள் செல்ல மீதமுள்ள அனைத்து போட்டிகளில் வெல்ல வேண்டியது அவசியம். இல்லாவிடில், இங்கிலாந்து அணி அரையிறுதி செல்வது கேள்விக்குறிதான்.  தற்போது ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்த நிலையில், அடுத்ததாக இந்தியா, நியூஸிலாந்து அணிகளை கட்டாயம் வென்றாக வேண்டிய நிலையில் இருக்கிறது.

இந்த நிலையில், போட்டிக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் கூறியதாவது:-  இதில் இருந்து எப்படி மீண்டு செல்கிறோம் என்பதற்கு நாங்கள்தான் பொறுப்பாகும்.  மீதமுள்ள இரு போட்டிகளிலும் வென்று கட்டாயம் நாங்கள் அரையிறுதிக்கு செல்வோம். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த ஆட்டத்திலும், இலங்கைக்கு எதிரான ஆட்டத்திலும் எங்களின் அடிப்படை பேட்டிங் மந்திரமான, அட்டாக்கிங் பேட்டிங்கை மறந்துவிட்டு செயல்பட்டோம். அதுதான் தோல்விக்கு முக்கியக் காரணம் என்று கருதுகிறேன். ஆஸ்திரேலிய அணி சிறப்பாக பந்து வீசியது.

பொதுவாக நாங்கள் போட்டியில் தோல்வி அடைந்துவிட்டால், அது குறித்து கலந்தாய்வு செய்து இன்னும் சிறப்பாக எங்கு செயல்பட்டிருக்கலாம் என ஆய்வு செய்வோம். இனிவரும் போட்டிகளில் சிறப்பான பேட்டிங் எங்களிடம் இருக்கும். வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுடனான ஆட்டத்தை ஆர்வத்துடன் எதிர்கொள்வோம்” என்றார். 

Next Story