ஓய்வு முடிவை மாற்றினார், கெய்ல்: மேலும் ஒரு தொடரில் பங்கேற்க போவதாக அறிவிப்பு


ஓய்வு முடிவை மாற்றினார், கெய்ல்: மேலும் ஒரு தொடரில் பங்கேற்க போவதாக அறிவிப்பு
x
தினத்தந்தி 27 Jun 2019 12:10 AM GMT (Updated: 27 Jun 2019 12:10 AM GMT)

ஓய்வு முடிவை மாற்றிய கெய்ல், மேலும் ஒரு தொடரில் பங்கேற்க போவதாக அறிவித்துள்ளார்.

மான்செஸ்டர்,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் அதிரடி புயல் 39 வயதான கிறிஸ் கெய்ல் உலக கோப்பை போட்டியுடன் ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விடுவேன் என்று சில மாதங்களுக்கு முன்பு கூறியிருந்தார். இந்த நிலையில் அவர் தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ளார். உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக இன்று மோதுவதையொட்டி கிறிஸ் கெய்ல் நேற்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் ஓய்வு தொடர்பான கேள்விக்கு பதில் அளித்து கூறியதாவது:-

வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக கால் பதிக்கும் ஒவ்வொரு தருணத்தையும் ரசித்து அனுபவிக்கிறேன். எனது கிரிக்கெட் வாழ்க்கை இன்னும் முடிந்து விடவில்லை. மேலும் சில ஆட்டங்கள் உள்ளன. அது இன்னொரு தொடராக கூட நீடிக்கலாம். யாருக்கு தெரியும்? என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். அதாவது உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகும் விளையாட திட்டமிட்டு இருக்கிறேன். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நான் விளையாட வாய்ப்பு உள்ளது. இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் நிச்சயம் ஆடுவேன். ஆனால் 20 ஓவர் தொடரில் ஆடமாட்டேன். இது தான் உலக கோப்பைக்கு பிந்தைய எனது திட்டமிடல் ஆகும்.

கிரிக்கெட்டின் ‘யுனிவர்ஸ் பாஸ்’ (பிரபஞ்சத்தின் தலைவன்) என்று என்னை அழைப்பார்கள். ‘மினி யுனிவர்ஸ் பாஸ்’ ஆகும் திறமை சக வீரர் நிகோலஸ் பூரனுக்கு உள்ளதாக நம்புகிறேன். அதிரடி காட்டக்கூடிய அவர் அற்புதமான ஒரு இளம் வீரர். அவர் உலக சாதனைகளை படைக்கப் போகிறார். இதே போல் ஷாய் ஹோப்பும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டில் முக்கிய பங்கு வகிப்பார். வருங்காலத்தில் அவர் கேப்டனாக கூட ஆகலாம். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. இவ்வாறு கெய்ல் கூறினார்.

உலக கோப்பை தொடர் நிறைவடைந்ததும் இந்திய அணி ஆகஸ்டு முதல் வாரத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு சென்று மூன்று 20 ஓவர், மூன்று ஒரு நாள் மற்றும் 2 டெஸ்ட் கொண்ட தொடரில் பங்கேற்க இருக்கிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் மீடியா மேலாளர் பிலிப் ஸ்பூனர் கூறுகையில், ‘உள்ளூரில் நடக்கும் இந்தியாவுக்கு எதிரான தொடரே கிறிஸ் கெய்லின் கடைசி சர்வதேச தொடராக இருக்கும்’ என்றார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு முச்சதங்கள் அடித்துள்ள கெய்ல் 2014-ம் ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட் ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story