உலக கோப்பை கிரிக்கெட் : அரையிறுதி நடக்க உள்ள மான்செஸ்டரில் மழைக்கான சூழல் நிலவுகிறது


உலக கோப்பை கிரிக்கெட் : அரையிறுதி நடக்க உள்ள மான்செஸ்டரில் மழைக்கான சூழல் நிலவுகிறது
x
தினத்தந்தி 9 July 2019 8:38 AM GMT (Updated: 9 July 2019 8:38 AM GMT)

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - நியூசிலாந்து மோதும் அரையிறுதி நடக்க உள்ள மான்செஸ்டரில் மழைக்கான சூழல் நிலவுகிறது.

சென்னை,

2019 கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்தியாவுக்கும், நியூசிலாந்துக்கும் இடையிலான முதல் அரையிறுதிப் போட்டி இன்று  மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெறுகிறது.  

இன்று நடைபெறும் போட்டியில் 50 சதவீதம் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், இன்று மழை காரணமாக போட்டி நடைபெறவில்லை என்றால், நாளை  புதன்கிழமை நடைபெறும். ரிசர்வ் நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. நாளையும் மழை காரணமாக போட்டி நடைபெறவில்லை என்றால், என்ன நடக்கும்?

அந்த நேரத்தில் லீக் சுற்றில் இரு அணிகளின் செயல்திறனை அடிப்படையில் (புள்ளி பட்டியல்) இறுதிச்சுற்றுக்கு செல்லும் என்று கிரிக்கெட் நிபுணர்கள் கூறுகின்றனர். இதுவரை, இந்தியா 8 போட்டிகளில் விளையாடி 15 புள்ளிகளைப் பெற்று முதல் இடத்தில் உள்ளது. 

மறுபுறம், நியூசிலாந்து 11 புள்ளிகளை பெற்றுள்ளது. மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டால் இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கூறப்படுகிறது. நியூசிலாந்து மட்டும் வெளியேற வேண்டிய சூழல் நேரிடும். மழை காரணமாக போட்டி நிறுத்தப்படும் என்றால், பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் இந்தியா எளிதாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

இங்கிலாந்தின் மான்செஸ்டரில் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு இந்தியா - நியூசிலாந்து போட்டி தொடங்க உள்ளது. ஆனால் மான்செஸ்டரில் மேகங்கள் சூழ்ந்து மழைக்கான அறிகுறி தொடங்கி உள்ளது.

Next Story