உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தென்ஆப்பிரிக்க அணியில் இடம் கேட்டு வற்புறுத்தவில்லை டிவில்லியர்ஸ் விளக்கம்


உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தென்ஆப்பிரிக்க அணியில் இடம் கேட்டு வற்புறுத்தவில்லை டிவில்லியர்ஸ் விளக்கம்
x
தினத்தந்தி 12 July 2019 10:30 PM GMT (Updated: 12 July 2019 7:48 PM GMT)

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தென்ஆப்பிரிக்க அணியில் இடம் கேட்டு நான் வற்புறுத்தவில்லை என்று முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.

ஜோகனஸ்பர்க், 

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தென்ஆப்பிரிக்க அணியில் இடம் கேட்டு நான் வற்புறுத்தவில்லை என்று முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.

வாய்ப்பு கேட்டதாக சர்ச்சை

கடந்த ஆண்டு மே மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற தென்ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் டிவில்லியர்ஸ் உலக கோப்பை போட்டிக்கான தென்ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்படுவதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பு அணியில் இணைந்து விளையாட தயார் என்று கேப்டன் டுபிளிஸ்சிஸ், பயிற்சியாளர் ஓட்டிஸ் கிப்சன் ஆகியோரிடம் தகவல் தெரிவித்ததாகவும், அதனை தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் நிராகரித்ததாகவும் செய்திகள் வெளியாயின.

இந்த செய்தி குறித்து தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரிய தேர்வு குழு தலைவர் லின்டா ஜோன்டி கருத்து தெரிவிக்கையில், ‘சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டாம் என்று டிவில்லியர்சை மன்றாடினோம். பாகிஸ்தான், இலங்கைக்கு எதிரான போட்டி தொடரில் விளையாடினால் அணிக்கு தேர்வு செய்கிறோம் என்று தெரிவித்தோம். ஆனால் அந்த தொடர்களில் ஆட மறுத்த அவர் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தில் நடந்த உள்ளூர் லீக் போட்டியில் ஆடினார். அத்துடன் ஓய்வு பெறுவதாகவும் அறிவித்தார். அவர் விலகியதால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப சிரமப்பட்டோம். அந்த இடத்துக்கு மாற்று வீரர்களை தயார்படுத்தி விட்டோம். அப்படி இருக்கையில் கடைசி நேரத்தில் அணியில் சேர தயார் என்று சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்’ என்றார்.

மவுனம் கலைத்த டிவில்லியர்ஸ்

இந்த நிலையில் ஒரு மாத காலத்துக்கு பிறகு தன் மீதான சர்ச்சை குறித்து 35 வயதான டிவில்லியர்ஸ் மவுனம் கலைத்து இருக்கிறார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:–

உலக கோப்பை போட்டியில் தென்ஆப்பிரிக்க அணியின் பயணம் முடிவுக்கு வந்து விட்டதால் என் மீதான தவறான விமர்சனங்களுக்கு பதில் அளிக்க விரும்புகிறேன். உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தென்ஆப்பிரிக்க அணியில் இடம் வேண்டும் என்று நான் வற்புறுத்தவில்லை. அணியில் இடம் பெற வேண்டும் என்று அழுத்தம் எதுவும் கொடுக்கவும் இல்லை. அணியில் சேர்ப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. என்னை பொறுத்தமட்டில் இதில் பற்றி எறியும் பிரச்சினை எதுவும் இருப்பதாக நினைக்கவில்லை. அநீதியானது என்றும் கருதவில்லை. நான் ஓய்வு அறிவித்த நாளில் உலக கோப்பை போட்டியில் விளையாட தயாரா? என்று தனிப்பட்ட முறையில் என்னிடம் கேட்கப்பட்டதற்கு ஆம் என்று தெரிவித்தேன். மற்றபடி நானாக அணியில் இடம் கேட்கவில்லை.

ஓய்வு முடிவை அறிவித்த பிறகு எனக்கும், தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்துக்கும் இடையே தொடர்பு எதுவுமில்லை. நானும் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளை தொடர்பு கொள்ளவில்லை. அவர்களும் என்னுடன் தொடர்பு எதுவும் வைக்கவில்லை. டுபிளிஸ்சிஸ்சும், நானும் பள்ளி பருவத்தில் இருந்தே நண்பர்கள். உலக கோப்பை போட்டிக்கான தென்ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்படுவதற்கு 2 நாட்களுக்கு முன்பு டுபிளிசிஸ்சை தொடர்பு கொண்டு பேசினேன். ஐ.பி.எல். போட்டியில் நான் ஓரளவு நல்ல பார்மில் இருந்தேன். அதனை தொடர முடியும் என்று நம்புகிறேன். தேவைப்பட்டால் உலக கோப்பை போட்டியில் நான் ஆடுகிறேன் என்று தெளிவாக தெரிவித்தேன்.

பணத்துக்காக ஆடவில்லை

உலக கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணி தோல்வியை சந்தித்தது. தொடர்ச்சியாக 3–வது தோல்வியை சந்தித்த அந்த தருணத்தில் எங்களது தனிப்பட்ட உரையாடல்கள் மீடியாக்களில் கசிந்து என்னை மோசமானவாக சித்தரித்தது. இந்த உரையாடலை நான் வெளியிடவில்லை. என்னை சார்ந்தவர்களோ, டுபிளிசிஸ்சோ இந்த தகவலை கசியவிடவில்லை. தோல்வியால் எழுந்த விமர்சனத்தை திசைதிருப்ப யாராவது இதனை செய்து இருக்கலாம். இதனை செய்தது யார் என்பது எனக்கு தெரியவில்லை.

இதைத்தொடர்ந்து நியாயமற்ற முறையில் என்னை ஆணவக்காரன், சுயநலவாதி, தீர்மானமற்றவன் என்று கண்டபடி விமர்சித்தனர். எனது மனசாட்சி தெளிவாக உள்ளது. நேர்மையான காரணத்துக்காகவே நான் ஓய்வு முடிவை எடுத்தேன். உலக கோப்பை அணியில் இடம் கிடைக்காததால் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. யார் மீதும் எனக்கு கோபம் கிடையாது. பணத்தை குறிக்கோளாக கொண்டு நான் செயல்படுவதாக கூறுவது தவறானது. உலகம் முழுவதும் நடைபெறும் பல்வேறு லீக் போட்டிகளில் பங்கேற்க அதிக பணம் தருவதாக எனக்கு அழைப்பு வந்தது. எனது குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவிட விரும்பியதால் அந்த வாய்ப்புகளை புறக்கணித்தேன். முன்பு நான் ஒரு வருடத்தில் 8 மாதங்கள் வெளியூரில் இருக்கும் நிலை இருந்தது. அதனை தற்போது 3 மாதமாக குறைத்து இருக்கிறேன்.

வீரர்களுடன் நல்ல உறவு உள்ளது

தற்போது நான் எனது குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவிட விரும்புகிறேன். இதனால் குறிப்பிட்ட சில போட்டிகளை மட்டும் தேர்ந்தெடுத்து விளையாடுகிறேன். தென்ஆப்பிரிக்க அணிக்காக விளையாடியதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். தென்ஆப்பிரிக்க அணி வீரர்களுடனான எனது உறவு இன்னும் வலுவாகவே உள்ளது. வருங்கால தலைமுறை வீரர்களுக்கு ஆதரவு அளிக்கவும், உதவி செய்யவும் நான் எப்பொழுதும் தயாராக இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story